சென்னை: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் வரும் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், இந்த முறை இறுதிப்போட்டியில் மோதப் போகும் இரண்டு அணிகள் எவை என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கணித்துள்ளார்.
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் இந்தத் தொடர் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தனது யூடியூப் சேனலான 'சீக்கி சீக்கா'வில் பேசிய ஸ்ரீகாந்த், அரையிறுதிக்குச் செல்லும் அணிகள் மற்றும் இறுதிப்போட்டி குறித்த தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளார்.

ஸ்ரீகாந்த் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். கடந்த முறை இறுதிப்போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா மற்றும் அரையிறுதிக்கு கூடத் தகுதி பெறாத ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இம்முறை வலுவாகத் திரும்ப வரும்" என்று கூறினார்.
2026 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி குறித்துப் பேசிய அவர், "இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோத அதிக வாய்ப்புள்ளது. இந்தியாவுக்குக் கடும் போட்டியாளராக ஆஸ்திரேலியா இருக்கும். இந்த இரண்டு அணிகளும் இறுதிப்போட்டியில் சந்தித்தால் ஆட்டம் அனல் பறக்கும்" என்று தெரிவித்தார்.
ஆஸ்திரேலிய அணி குறித்துப் பேசிய ஸ்ரீகாந்த், "இந்தியாவைப் போலவே ஆஸ்திரேலியாவும் பயங்கரமான பேட்டிங் வரிசையை வைத்துள்ளது. டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், டிம் டேவிட், கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேமரூன் கிரீன் என அதிரடி வீரர்கள் உள்ளனர். இந்த 5 பேரில் யாராவது இரண்டு பேர் நிலைத்து நின்றாலே அது எதிரணிக்குப் பெரிய ஆபத்தாக முடியும். ஆல்-ரவுண்டர்கள் அதிகம் இருப்பது அவர்களுக்குக் கூடுதல் பலம்" என்றார்.
அதே சமயம் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு குறித்து ஸ்ரீகாந்த் கவலை தெரிவித்தார். "ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சில் பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் ஆடம் ஜம்பா ஆகியோரைத் தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் இந்திய மைதானங்களில் தடுமாற வாய்ப்புள்ளது. மற்ற பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களிடம் அடி வாங்குவார்கள்" என்று ஸ்ரீகாந்த் விமர்சித்தார்.
மேலும் ஆஸ்திரேலியாவின் இளம் வீரர் கூப்பர் கனோலி ஒரு தரமான வீரர் என்றும் ஸ்ரீகாந்த் பாராட்டியுள்ளார். உலகக்கோப்பைத் திருவிழா தொடங்கவுள்ள நிலையில், ஸ்ரீகாந்தின் இந்தக் கணிப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே விவாதத்தைக் கிளப்பியுள்ளது.