கொழும்பு: 2026 டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக கொழும்பில் நடைபெற்ற கேப்டன்கள் சந்திப்பில் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, வங்கதேச அணி தொடரிலிருந்து நீக்கப்பட்டது குறித்துப் பேசி மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான அனைத்து அணிகளின் கேப்டன்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு வியாழக்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகாவிடம், வங்கதேச விவகாரம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல அமைந்துள்ளது.

வங்கதேச அணி குறித்துப் பேசிய சல்மான் அலி ஆகா, "வங்கதேச மக்கள் எங்கள் சகோதரர்கள். அவர்கள் பாகிஸ்தானுக்கு அளிக்கும் ஆதரவுக்கு நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அத்தகைய ஒரு அணி இந்த உலகக்கோப்பையில் விளையாடாமல் போனது மிகவும் வருத்தமளிக்கிறது. இது ஒரு பரிதாபமான நிலை" என்று வேதனையுடன் தெரிவித்தார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா சென்று விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்தது. போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்ததால், அந்த அணி தொடரிலிருந்தே நீக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணித்துத் தங்களுக்கு ஆதரவு தெரிவித்ததற்காகப் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு வங்கதேச அரசு நன்றி தெரிவித்துள்ளது. வங்கதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "நன்றி பாகிஸ்தான்" என்று பதிவிட்டுள்ளார். மேலும், பாகிஸ்தான் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார்.
முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசுகையில், "விளையாட்டு மைதானத்தில் அரசியல் இருக்கக்கூடாது. வங்கதேசத்தை நீக்கியதைக் கண்டித்து இந்தியாவுடனான போட்டியைப் புறக்கணிப்பது என்று நாங்கள் தீர்க்கமாக முடிவு செய்துள்ளோம். இது மிகவும் சரியான முடிவு. நாங்கள் முழுமையாக வங்கதேசத்திற்குத் துணையாக நிற்கிறோம்" என்று கூறியிருந்தார்.
உலகக்கோப்பைத் தொடர் நாளை தொடங்கவுள்ள நிலையில், பாகிஸ்தான் கேப்டன் மற்றும் பிரதமரின் இந்தக் கருத்துக்கள், இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளன.