லண்டன்: சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐசிசி) எங்கே அடித்தால் வலிக்குமோ, சரியான அந்த இடத்தைப் பார்த்துப் பாகிஸ்தான் அடித்துள்ளதாகவும், இந்தியாவுடன் விளையாட மறுப்பது என்பது பாகிஸ்தான் கையில் எடுத்துள்ள மிக முக்கியமான ஆயுதம் என்றும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மார்க் புச்சர் தெரிவித்துள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிப்பதாகப் பாகிஸ்தான் அறிவித்துள்ளது. இது வெறும் அரசியல் சார்ந்த முடிவு மட்டுமல்ல, இதன் பின்னணியில் மிகப்பெரிய வர்த்தகப் போர் இருப்பதை மார்க் புச்சர் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.

இது பற்றி பேசிய மார்க் புச்சர், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இப்போது இருதரப்புத் தொடர்களில் விளையாடுவதில்லை. ஆனால், ஐசிசி நடத்தும் உலகக்கோப்பைத் தொடர்களில் மட்டும் எப்படித் தொடர்ந்து ஒரே பிரிவில் இடம்பெறுகின்றன? இது அதிர்ஷ்டத்தாலோ அல்லது குலுக்கல் முறையாலோ நடப்பதில்லை. வேண்டும் என்றே திட்டமிட்டுச் செய்யப்படுகிறது.
ஏனென்றால், உலக விளையாட்டிலேயே அதிக வருவாயை ஈட்டித் தரும் போட்டி இதுதான். அதனால் ஐசிசி இந்த இரண்டு அணிகளையும் ஒரே பிரிவில் சேர்க்கிறது. ஆனால் இப்போது பாகிஸ்தான் எடுத்துள்ள முடிவு ஐசிசியின் வருமானத்தில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது" என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய சூழலில் பாகிஸ்தான் ஒரு சிறிய தம்பியைப் போல நடத்தப்படுகிறது. ஆனால் இந்தியா நினைப்பதுதான் நடக்கிறது. மற்ற அணிகள் தகுதிச் சுற்று விளையாடி வர வேண்டும். ஆனால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.
இந்தியாவுக்காகத் தொடரின் அட்டவணை மாற்றப்படுகிறது. இந்தியா விரும்பும் இடத்தில் விளையாட வேண்டும் என்பதற்காக, மற்ற அணிகள் தங்கள் பயணத் திட்டங்களை மாற்றிக்கொண்டு அலைய வேண்டியுள்ளது. இது மற்ற அணிகளுக்குச் செய்யப்படும் அநீதி" என்று மார்க் புச்சர் 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரின் போது இந்தியா மட்டும் துபாயில் விளையாடியதை சுட்டிக்காட்டினார்.
பாகிஸ்தானின் புறக்கணிப்பு முடிவு குறித்துப் பேசிய அவர், "பாகிஸ்தான் இப்போது மிகச் சரியான காயை நகர்த்தியுள்ளது. 'நாங்கள் உலகக்கோப்பையில் பங்கேற்போம், ஆனால் இந்தியாவுடன் மட்டும் விளையாட மாட்டோம்' என்று அவர்கள் கூறியிருப்பது ஐசிசிக்கு விடப்பட்ட நேரடி சவால்.
வங்கதேச விவகாரத்தில் ஐசிசி செய்ததற்குப் பதிலடியாகப் பாகிஸ்தான் இதைச் செய்துள்ளது. இந்தியாவுடன் விளையாடவில்லை என்றால், அந்தப் போட்டியின் மூலம் கிடைக்கும் பிரம்மாண்ட வருவாய் கிடைக்காது. இது ஐசிசிக்கு மட்டுமல்ல, இந்தியாவுக்கும் பொருளாதார ரீதியாகப் பேரிழப்பு தான். பாகிஸ்தான் தன்னைத் தற்காத்துக்கொள்ளவும், ஐசிசிக்குத் தனது எதிர்ப்பைப் பதிவு செய்யவும் இருந்த ஒரே வழி இதுதான். அதை அவர்கள் சரியாகப் பயன்படுத்தியுள்ளனர்" என்று மார்க் புச்சர் தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.