எங்க கிட்ட அவங்க உரசுனது உண்மைதான் பாஸு.. டோணி உறுதி!
மான்செஸ்டர்: இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜாவுடன் உடல் ரீதியாக இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் மோதியது உண்மைதான். அதை நாங்கள் முறையாக புகார் கொடுத்தோம் என்று கேப்டன் டோணி மீண்டும் உறுதிபடக் கூறியுள்ளார்.
இதன் மூலம் ஜடேஜா - ஆண்டர்சன் சர்ச்சை மீண்டும் உயிர் பெற்றுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தான் ஏற்கனவே சொன்னதில் எந்த மாற்றமும் இல்லை. அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றும் டோணி கூறியுள்ளார்.
இரு அணி வீரர்களுக்கும் இடையே நாட்டிங்காம் டெஸ்ட் போட்டியின்போது இந்த மோதல் வெடித்தது. இதில் முதலில் ஜடேஜாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் ஆண்டர்சன் மீதான புகாரின்போது விசாரணையில் இருவர் மீதான புகாரும் கைவிடப்படுவதாகவும், ஆண்டர்சன் விடுவிக்கப்படுவதாகவும் விசாரணைக் கமிஷன் கூறி விட்டது. இது இந்தியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்துள்ளது. இன்று 4வது டெஸ்ட் தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் டோணி பிரச்சினையை வெளியில் எடுத்துள்ளார்.

சரியாகத்தான் சொன்னேன்
இந்த விவகாரம் குறித்து டோணி கூறுகையில், நான் செய்தது சரிதான் என்று இப்போதும் நினைக்கிறேன். நான் எதைச் சரியாக சொன்னேனோ அது சரிதான் என்று இப்போதும் கருதுகிறேன். எது தவறு என்று கருதினேனோ அது தவறு என்று இப்போதும் சொல்கிறேன்.

தவறு செய்தால் அப்படிப் பேச மாட்டேன்
யாராவது தவறு செய்திருந்தால், அது நம் பக்கமே நடந்திருந்தாலும் கூட நான் அவர்களுக்கு ஆதரவாகப் பேச மாட்டேன். தவறு நடந்தது உண்மைதான். எனவேதான் நடந்தது தவறு என்று நான் உறுதியாக கூறினேன்.

அபாண்டம் சொன்னால் சும்மா இருக்க மாட்டேன்
என்னுடைய வீரர் சரியான நிலையில்தான் இருந்தார். ஆனால் அவருக்கு அபராதம் விதிப்பது என்றால் அதை நான் வேடிக்கை பார்க்க முடியாது. நிச்சயம் அவருக்காக நான் ஆதரவு தெரிவிக்கத்தான் செய்வேன். அதேசமயம் அவர் தவறு செய்திருந்தால் நிச்சயம் அதற்கான தண்டனையை அனுபவிக்கட்டும். அதை நான் தடுக்கப் போவதில்லை. ஆனால் அவர் எல்லை தாண்டவில்லை என்பதை நான் அறிவேன்.

உடல் ரீதியான மோதல் நடந்தது உண்மை
உடல் ரீதியான தாக்குதல் நடந்தது உண்மை. இதை நாங்கள் முறையாக தெரிவித்து விட்டோம். எங்களை அவதூறாகப் பேசியது குறித்துக் கூட நாங்கள் புகார் கூறவில்லை. உடல் ரீதியான தாக்குதலைத்தான் நாங்கள் புகார் கூறினோம். சில தவறான, கடுமையான வார்த்தைகள் பேசப்பட்டன. அதுகுறித்து நாங்கள் எதுவுமே பேசவில்லை.

ஏற்றுக் கொள்ளமுடியாத தாக்குதல்
ஆனால் ஏற்றுக் கொள்ள முடியாத தாக்குதலை, உடல் ரீதியான தாக்குதலை எப்படி அமைதியாக பார்க்க முடியும். இது மோசமான சம்பவம். எனவேதான் நான் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். இதற்கு மேல் ஐசிசியின் பொறுப்பு. என்ன தேவையோ அதைச் செய்ய வேண்டியது அவர்கள்தான். அது அவர்களது வேலை. அதற்கு மேல் எனக்கு அதிகாரம் கிடையாது என்றார் டோணி.


Click it and Unblock the Notifications