மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தாங்கள் ஏன் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கிறார்கள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி சூர்யகுமாரின் அதிரடி சதத்தால் 5 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் எடுத்துள்ளது.
மும்பை அணியின் பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பும்ரா ஆகியோர் இல்லாதது, அவர்களுடைய பந்துவீச்சை மோசமாக்கியது. இதனால் மும்பை அணியின் பலம் பேட்டிங் மட்டும் தான் என கருதப்பட்டது. ஆனால், இவ்வளவு நாளாக இந்த பையனை எங்கப்பா ஒழிச்சி வச்சிருந்தீங்க என்று கேட்பது போல் 28 வயதான ஆகாஷ் மத்வாலை களமிறக்கினர்.

நடப்பு தொடரில் ஏற்கனவே 3 போட்டிகளில் விளையாடி ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய ஆகாஷ் மத்வால், இன்றைய ஆட்டத்தில் இம்பேக்ட் வீரராக களமிறங்கினார். பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களின் பவுலிங் ஆக்சன் போல் இருக்கும் மத்வால், குஜராத் அணி வீரர்களுக்கு தூங்கா இரவை பரிசளித்தார்.
தன்னுடைய முதல் ஒவரின் 5வது பந்தில் ஆகாஷ் மத்வால் வீசிய பந்தை எதிர்கொள்ள முடியாமல் சாஹா ஆட்டமிழந்தார். இதனையடுத்து, அதிரடி வீரர் சுப்மன் கில் விக்கெட் தான், அனைவராலும் பாராட்டப்பட்டது. ஸ்டம்பை குறிவைத்து ஆகாஷ் மத்வால் வீச, அதனை கணிக்க முடியாமல் சுப்மன் கில் மிஸ் செய்ய ஸ்டம்ப்கள் பறந்தது.
இதன் மூலம் குஜராத் அணி பவர்பிளேக்குள் முக்கிய 2 விக்கெட்டுகளை ஆகாஷ் மத்வால் வீழ்த்தினார். இவர் ஏற்கனவே கடந்த ஆட்டத்தில் ஆர்சிபி உடன் மோதும் போது கடைசி ஓவரில் யாக்கர்களை வீழ்த்தி அசத்தினார். இந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய ஆகாஷ் மத்வால் 31 ரன்களை விட்டு கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது.