மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் மட்டுமே நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தோல்விக்கு பின் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இந்த வாரத்தில் தேர்வு செய்யப்படவுள்ளது.

இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் சொதப்பிய இந்திய சீனியர்களை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. இதனால் தேர்வுக் குழு எந்த வீரரை நீக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கேப்டன் என்பதால் ரோகித் சர்மாவை நீக்குவது இயலாத விஷயமாகும். அதேபோல் விராட் கோலியை நீக்க வாய்ப்புகள் இல்லை என்றே பார்க்கப்படுகிறது.
இதனால் வழக்கம் போல் புஜாரா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரை நீக்கவே முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் கெய்க்வாய் இருவரும் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் ரிஷப் பந்த் காயத்தில் இருந்து குணமடையாததால், கேஎஸ் பரத் விக்கெட் கீப்பராக தொடர்வார் என்று தெரிய வருகிறது.
அதுமட்டுமல்லாமல் அண்மையில் இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் களமிறங்கி சிறப்பாக செயல்பட்ட அர்ஷ்தீப் சிங் மற்றும் இந்திய வேகப்புயல் உம்ரான் மாலிக் இருவரும் இந்திய அணி தேர்வு செய்யப்படலாம் என்றும் தெரிய வந்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட சிராஜ் மீண்டும் தேர்வு செய்யப்பட்டாலும், உலகக்கோப்பை நெருங்குவதால் அவர் களமிறங்க வாய்ப்பில்லை என்றும், ஷமிக்கு ஓய்வு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.