
டி20 உலகக்கோப்பை இந்திய அணி
டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு விட்டாலும், அதனை மாற்றுவதற்கு கால அவகாசம் உள்ளது. இன்று அக்டோபர் 10ம் தேதிக்குள் ஐசிசி-யிடம் இறுதி செய்யப்பட்ட அணி வீரர்கள் பட்டியலை பிசிசிஐ ஒப்படைக்க வேண்டும். அதன்படி அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் என்ன மாற்றம் கொண்டு வர அதிகாரிகள் குழு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புதிய நெட் பவுலர்
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் வலைப்பயிற்சி பவுலர்களில் புதிய இணைப்பை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ. ஐபிஎல் தொடரில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசிய உம்ரான் மாலிக் வலைப்பயிற்சி பவுலராக சேர்க்கப்பட்டுள்ளார். 21 வயதே ஆகும் உம்ரான் மாலிக் ஜம்மு -காஷ்மீரை சேர்ந்த வேகப்பந்துவீச்சாளர் ஆவார். இவர் நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி உள்ளார். வெறும் 3 போட்டிகளில் பங்கேற்றாலும் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் தொடர்ந்து பந்துவீசி ஆச்சரியம் கொடுத்தார்.

திருப்புமுனைப் போட்டி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தான் அவருக்கு பெரும் திருப்புமுனை கிடைத்துள்ளது. 4 ஓவர்கள் வீசிய அவர் 21 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். தனது முதல் ஓவரிலேயே ஒரேயொரு ரன் கொடுத்து ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி பெங்களூரு அணியை திணறடித்தார். மேலும்
9ஆவது ஓவரில் படிக்கலுக்கு வீசிய பந்து 153 கிலோ மீட்டர் வேகத்தில் சீறியது. இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளிலே அதிக வேகத்தில் பந்து வீசியவர் என்ற பெருமையும் அவருக்குக் கிடைத்திருக்கிறது.

அடுத்த நடராஜன்
உம்ரான் மாலிக்கின் திறமையை எதிரணி கேப்டனாக இருந்த விராட் கோலியும் பாராட்டியிருந்தார். ஐ.பி.எல். தொடர் ஒவ்வொரு ஆண்டும் பல வீரர்களின் திறமைகளை வளர்க்கிறது. ஒரு இளம் வேகப்பந்துவீச்சாளர் 150 கி.மீ வேகத்தில் பந்துவீசுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறினார். ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பு உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடிக்கொண்டிருந்த அவர் தனது அதிவேக பந்துவீச்சின் மூலம் தற்போது 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் நெட் பந்துவீச்சாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. நடராஜானை போன்று இவரும் வலைப்பயிற்சி பவுலரில் இருந்து மெயின் அணிக்கும் செல்ல வாய்ப்பு ஏற்படலாம்.


Click it and Unblock the Notifications











