தரம்சாலா: நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் வெற்றிபெற்றதன் மூலமாக பாதி கடமை முடிந்துவிட்டதாக இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 273 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் 130 ரன்களும், ரச்சின் ரவீந்திரா 75 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 48 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 274 ரன்கள் சேர்த்து அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் அதிகபட்சமாக நட்சத்திர வீரர் விராட் கோலி 95 ரன்களும், ரோகித் சர்மா 46 ரன்களும், ஜடேஜா 39* ரன்களும் எடுத்து அசத்தினர். இதன் மூலம் இந்திய அணி 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பேசுகையில், உலகக்கோப்பை தொடரை சிறப்பாக தொடங்கி விளையாடி வருகிறோம். இந்த வெற்றியின் மூலம் பாதி கடமை முடிவடைந்துவிட்டது. சமநிலையை தவறவிடாமல் இருக்க வேண்டும். அதேபோல் வெற்றிக்கு பின், அடுத்த இலக்கை நோக்கி கவனம் செலுத்த வேண்டும். இன்றைய ஆட்டத்தில் கிடைத்த வாய்ப்பை முகமது ஷமி சிறப்பாக பயன்படுத்தி கொண்டுள்ளார். இதுபோன்ற சூழல்களில் விளையாடிய அனுபவம் முகமது ஷமிக்கு உள்ளது.
ஒரு கட்டத்தில் நியூசிலாந்து அணி 300 ரன்களை எட்டும் நிலை ஏற்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் இந்திய அணி பவுலர்கள் சிறப்பாக பந்துவீசினார்கள். நானும் சுப்மன் கில்லும் வெவ்வேறு மனநிலை கொண்டவர்கள். இருவரும் இணைந்து சிறந்த தொடக்கத்தை கொடுப்பது மகிழ்ச்சியளிக்கிறது. விராட் கோலியை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. அவர் இதனை இந்திய அணிக்காக காலங்காலமாக செய்து வருகிறார். நாங்கள் மிடில் ஓவர்களில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த போதும், விராட் கோலி - ஜடேஜா இணைந்து ஆட்டத்தை மீட்டெடுத்தனர்.
எங்களின் ஃபீல்டிங்கை நினைத்து எப்போதும் பெருமை கொள்வோம். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஃபீல்டிங் மோசமாக அமைந்தது. உலகின் தலை சிறந்த ஃபீல்டர்களில் ஜடேஜாவும் ஒருவர். ஆனால் இதுபோல் சில நேரங்களில் நடக்கும். ஃபீல்டிங் மூலம் ஆட்டத்தில் பல்வேறு விவகாரங்களை கட்டுக்குள் வைக்க முடியும். அதேபோல் இந்தியாவின் பல்வேறு நகரங்களுக்கு பயண்ம் செய்து விளையாடி வெற்றிபெறுவது மகிழ்ச்சியாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.