ரோஹித்தின் நிலையை பார்த்து உறைந்து போன கோலி.. ரசிகர்கள் வேதனை.. கார்டிஃப் மைதானத்தில் என்ன நடந்தது?
கார்டிஃப்: இந்திய அணியின் ஜாம்பவான் ரோஹித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்தும் நீக்க பிசிசிஐ தேர்வு குழு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், 2வது ஒருநாள் போட்டியின் போது மைதானத்தில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் மிகுந்த சோகத்துடன் அமர்ந்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதைப் பார்த்து ரசிகர்கள் தங்களின் வேதனை மற்றும் ஆதங்கத்தை கொட்டி வருகின்றனர்.
இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியின் போது, பெவிலியனில் ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூன்று மூத்த வீரர்களும் மிகவும் சோகமாக அமர்ந்திருந்த காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இதைப் பார்த்த ரசிகர்கள், வழக்கமாக ஆட்டமிழந்த பிறகு விராட் கோலி இப்படி சோகமாக அமரமாட்டார் என்றும், அவர் முற்றிலும் உறைந்து போய் எதையோ இழந்துவிட்டதைப் போல வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

லார்ட்ஸ் போட்டியே தனது கடைசிப் போட்டி என்பதை ரோஹித் சர்மா தனது சக வீரர்களிடம் பகிர்ந்து கொண்டதால் தான் இந்த சோகமான சூழல் ஏற்பட்டதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
கார்டிஃப் போட்டியை நேரில் காண வந்திருந்த தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர், 39 வயதாகும் ரோஹித் சர்மாவை வரும் உலகக் கோப்பைக்கான திட்டங்களில் சேர்க்கப் போவதில்லை என்பதைத் அவரிடம் கூறி விட்டதாக தெரிகிறது. அவருக்குப் பதிலாக 3 ஒருநாள் இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் விளாசியுள்ள இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்குத் தொடர்ந்து 20 போட்டிகள் வரை வாய்ப்பளிக்க தேர்வு குழுவினர் விரும்புகின்றனர்.
செப்டம்பரில் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான உள்நாட்டுத் தொடரில் இருந்தே இந்த அதிரடி மாற்றம் தொடங்கும் என்றும் கூறப்படுகிறது. தற்போது ரோஹித் சர்மா தனது ஓய்வு முடிவை அறிவிப்பதா, அல்லது உள்ளூர் போட்டிகளில் ஆடுவதா என்பதை அவரே முடிவு செய்து கொள்ளலாம் ஆனால் அவருக்கு இனி இந்திய ஒருநாள் அணியில் இடம் இல்லை என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications

