தொடரை கைப்பற்றிய இந்தியா
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி முதல் இரண்டு போட்டிகளை வென்று தொடரை 2 - 0 என கைப்பற்றியது. அதனால், மூன்றாவது போட்டி அதிக முக்கியத்துவமற்ற போட்டியாக மாறியது.
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
இந்திய அணி இளம் வீரர்களை பரிசோதனை செய்ய முடிவு செய்தது. முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு பெறாத சில வீரர்களை மூன்றாவது போட்டியில் ஆட வைக்க திட்டமிடப்பட்டது. அவர்கள் அணியில் ஆட வேண்டும் என்றால் யாரை நீக்குவது என்ற குழப்பம் ஏற்பட்டது.
மூத்த வீரர்கள் ஓய்வு
மூத்த வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து விட்டு இளம் வீரர்களை தேர்வு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. எப்படியும் ரோஹித் சர்மா, தவான், கோலி மூவரில் இருவர் அணியில் இடம் பெற மாட்டார்கள் என கருதப்பட்டது.
ரோஹித், ஜடேஜா நீக்கம்
ஆனால், மூன்றாவது டி20 போட்டியில் ரோஹித் சர்மா, ஜடேஜா, கலீல் அஹ்மது நீக்கப்பட்டு கேஎல் ராகுல், தீபக் சாஹர், ராகுல் சாஹர் அணியில் இடம் பெற்றனர். கோலி கேப்டனாக தொடர்ந்தார். தவானும் அணியில் நீடித்தார்.
கோலி பதில்
டாஸ் போட்டு முடித்தவுடன் பேசிய கோலி ரோஹித் சர்மா அணியில் இல்லை என்பது குறித்து தெரிவித்தார். அப்போது "மூத்த வீரர் என்ற பெயரில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்து விட்டு இவர் மட்டும் ஏன் ஆடுகிறார்? என்ற ரசிகர்களின் மைன்ட் வாய்ஸ்க்கு" பதில் அளித்தார்.
சப்பைக்கட்டு
அவர் கூறுகையில், ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு கொடுத்துட்டோம். ஆனால், யாராவது முன்னே வந்து அணியை வழிநடத்த வேண்டும். சில இளம் வீரர்களும் விளையாடுகிறார்கள். அவர்களை அணியாக கூட்டு சேர்ந்து சர்வதேச கிரிக்கெட்டில் வழி நடத்த வேண்டும் என்றார். சூசகமாக தான் அணியில் இருந்தே தீர வேண்டும் என்பதற்கு சப்பையான காரணம் ஒன்றை கூறினார்.
கேப்டன் பதவிக்கு போட்டி
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு முன்பே கோலி இந்த தொடரில் ஓய்வு எடுப்பார், ரோஹித் சர்மா கேப்டனாக அணியை வழிநடத்துவார் என கூறப்பட்டது. ஆனால், திடீரென கோலி தன் ஓய்வை ரத்து செய்து விட்டு அணிக்கு திரும்பினார்.
கேப்டன் மாற்றம்
அப்போது ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து கோலியை நீக்க வேண்டும். ரோஹித்தை நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வந்தன என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஒரு போட்டியில் கூட தான் ஓய்வு எடுத்துக் கொள்ளாமல், ரோஹித்துக்கு ஓய்வு கொடுத்துள்ளார் கேப்டன் கோலி.