Virat Kohli: மாயமான விராட் கோலி கணக்கு.. 27.4 கோடி ரசிகர்கள் இருந்த இன்ஸ்டாகிராம் பக்கம் எங்கே?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் திடீரென காணாமல் போனது ரசிகர்களை பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியது. சுமார் 27.4 கோடி ரசிகர்கள் அவரை அந்த கணக்கில் பின்தொடர்ந்து வருகிறார்கள். உலகிலேயே அதிக நபர்களால் பின்தொடரப்படும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் விராட் கோலி முதல் 10 இடங்களில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கு காணவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது. சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு தற்போது அவரது கணக்கு மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது. என்ன நடந்தது?

ரசிகர்கள் அதிர்ச்சி
வெள்ளிக்கிழமை காலை விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேடிய ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது பக்கம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கியதா அல்லது அவரே கணக்கை தற்காலிகமாக நீக்கிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. சமூக வலைத்தளங்களில் உலகளவில் அதிகம் பின்தொடரப்படும் விளையாட்டு வீரர்களில் ஒருவரான கோலியின் கணக்கு மாயமானதால் இணையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கால்பந்து ஜாம்பவான்களான கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லியோனல் மெஸ்ஸிக்கு அடுத்தபடியாக அதிக ரசிகர்களை கொண்டவர் விராட் கோலி என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் வந்தார்.. ஆனால்..
சிறிது நேர பரபரப்புக்கு பிறகு, விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் பக்கம் மீண்டும் பழையபடி செயல்படத் தொடங்கியது. ஆனால், இந்த இடைப்பட்ட நேரத்தில் கணக்கு ஏன் முடங்கியது என்பது குறித்து விராட் கோலி தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அவர் இது குறித்து தொடர்ந்து மௌனம் காத்து வருகிறார்.
சமீப காலமாகவே விராட் கோலி சமூக வலைத்தளங்களில் இருந்து சற்று ஒதுங்கியே இருக்கிறார். அவரது தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சார்ந்த பதிவுகள் வெகுவாக குறைந்துவிட்டன. 2025 சாம்பியன்ஸ் டிராபி வெற்றியை கூட மற்ற வீரர்களைப் போல அவர் சமூக வலைத்தளங்களில் பெரிய அளவில் கொண்டாடவில்லை. அவரது பக்கத்தில் பெரும்பாலும் விளம்பர நிறுவனங்களுடனான கூட்டு பதிவுகள் மட்டுமே வருவதால், ரசிகர்கள் அவரது கணக்கை "டைம்ஸ் ஸ்கொயர்" என்று கிண்டல் செய்து வந்தனர்.
கோலி சொன்ன காரணம்
சமூக வலைத்தள பயன்பாடு குறித்து முன்னரே பேசியிருந்த விராட் கோலி, "குறிக்கோள் இல்லாத தொழில்நுட்ப பயன்பாடு கவனத்தை சிதறடிக்கும் என்பதை நான் உணர்ந்துள்ளேன். தேவையில்லாமல் மணிக்கணக்கில் போனை பார்த்துக்கொண்டிருப்பது ஒரு வித போதை போன்றது. நல்லவேளையாக நான் ஸ்மார்ட்போன் இல்லாத காலத்தில் வளர்ந்தவன் என்பதால், போனை ஓரமாக வைத்துவிட்டு என்னால் நிம்மதியாக இருக்க முடிகிறது" என்று கூறியிருந்தார்.
டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட விராட் கோலி, தற்போது ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐபிஎல் தொடர்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக ஆடவுள்ள அவர், சர்வதேச போட்டிகளைப் பொறுத்தவரை அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவார். இந்தியா - இங்கிலாந்து ஒருநாள் தொடர் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. ஐபிஎல் தொடருக்கு பின் சுமார் இரண்டு மாதங்கள் விராட் கோலியை போட்டிகளில் பார்க்க முடியாது.


Click it and Unblock the Notifications