அயோத்தி: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், ரவீந்திர ஜடேஜா மற்றும் அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் நேரில் வந்துள்ளனர்.
அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் இன்று நடக்கவுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு ராமருக்கு நேரடியாக சடங்குகள் செய்யவுள்ளார். இந்த விழாவை மத்திய அரசு நாடு முழுவதும் அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை அளித்து கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில் அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க சினிமா நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள், அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர், அனில் கும்ப்ளே, தோனி, விராட் கோலி, ரோகித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல் மகளிர் வீராங்கனைகளான ஹர்மன்ப்ரீத் கவுர், மிதாலி ராஜ் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது, இருப்பினும் ஜனவரி 25ஆம் தேதி இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஐதராபாத் நகரில் நடக்கவுள்ளது. இதனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் பங்கேற்பார்களா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்த நிலையில் அயோத்தியில் நடக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க ரவீந்திர ஜடேஜா நேரில் வந்துள்ளார். அதேபோல் அதிகாலையில் மும்பையில் இருந்து புறப்பட்ட சச்சின் டெண்டுல்கர், தற்போது அயோத்தியை அடைந்துள்ளார். அதுமட்டுமல்லாமல் அனில் கும்ப்ளே தனது குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றுள்ளார்.
மேலும் வெங்கடேஷ் பிரசாத், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்டோரும் காவி சால்வை அணிந்து அயோத்தி அயோத்தி கோயிலில் உள்ளனர். அவர்களுக்கு விழா குழுவினர் சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.