
லீக் போட்டி
நேற்று நடைபெற்ற 48ஆவது லீக் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. இதில் முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 164 ரன்களை எடுத்தது. பெங்களூரு அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது. அதன் பிறகும் வந்த மெகஸ்வெல் மற்றும் டி வில்லியர்ஸும் அதிரடி காட்டவே ஆர்சிபி அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. இருப்பினும், முறையான ஃபினிஷர் யாரும் இல்லாததால் கடைசியில் சொதப்பவே 20 ஒவர்களில் ஆர்சிபி அணி 165 ரன்களை எடுத்தது.

பஞ்சாப் தோல்வி
அதன் பின்னர் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கும் சிறப்பான ஓப்பனிங் கிடைத்தது. கேப்டன் கே எல் ராகுல் 39 ரன்களையும் மயங் அகர்வால் 57 ரன்களையும் எடுத்து வெளியேறினர். அதன் பிறகு வந்த எந்த பேட்ஸ்மேனும் சிறப்பாக விளையாடவில்லை. இதனால் ஆட்டம் இறுதி ஓவர் வரை சென்றது. ஆர்சிபி அணிக்காக 20ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவை என்ற நிலையில், பஞ்சாப் அணியால் 12 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புள்ளி பட்டியலில் 3ஆம் இடத்தை உறுதி செய்தது. இந்த வெற்றியின் மூலம் 3ஆவது அணியாக பிளே ஆப் சுற்றுக்கு ஆர்சிபி முன்னேறியுள்ளது.

புது திட்டம்
இந்நிலையில் இது குறித்து பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி கூறுகையில், "இந்த ஆண்டின் ஐபிஎல் தொடர் எங்களுக்கு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. பெங்களூரு அணிக்கு லீக் சுற்றில் இன்னும் 2 போட்டிகள் உள்ளன. முதல் 2 இடங்களில் தகுதி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேற 2 வாய்ப்புகள் கிடைக்கும். எனவே அடுத்த 2 போட்டிகளிலும் அச்சமின்றி துணிச்சலாக நாங்கள் விளையாட வேண்டும். முதல் 2 இடங்களில் தகுதி பெற்றால் அது அணிக்குப் பெரிய உத்வேகத்தைக் கொடுக்கும்" என்று அவர் தெரிவித்தார்.

பஞ்சாப் அணி
கடந்த சில போட்டிகளாகவே சிறப்பான தொடக்கம் அமைந்தாலும் கூட, போட்டியை களத்தில் நின்று முடிக்க யாரும் இல்லாததால் பஞ்சாப் அணி தொடர்ந்து வெற்றியின் அருகில் சென்று தோல்வியடைந்து வருகிறது. இது குறித்து பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் கூறுகையில், "இந்த சீசன் மட்டுமில்லை. கடந்த சில ஆண்டுகளாகவே எங்கள் பேட்டிங் திருப்திகரமாக இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் பேட்டிங் சரியாக அமையாததாலேயே எங்களால் வெற்றி பெற முடியவில்லை. அணியின் நலனுக்காகக் கூடுதல் பொறுப்புகளை ஏற்பதில் எனக்கு எவ்வித சிக்கலும் இல்லை என்று என்னால் கூற முடியாது. நீங்கள் அணியை வழிநடத்தும்போது, பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்ளத் தான் வேண்டும்" என்றார்.

அடுத்த போட்டிகள்
பெங்களூரு அணி தற்போது 8 வெற்றிகளுடன் 16 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளது. லீக் சுற்றில் ஆர்சிபி அணிக்கு 2 போட்டிகள் மீதமுள்ளன. இதில் இரண்டிலும் ஆர்சிபி வென்று, மற்ற முடிவுகளும் அந்த அணிக்குச் சாதகமாக இருந்தால் பெங்களூரு அணியால் முதல் இரண்டு இடங்களில் ப்ளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும். பெங்களூரு அணி தனது அடுத்த போட்டியில் ஹைதராபாத் அணியை வரும் அக்டோபர் 6ஆம் தேதி எதிர்கொள்கிறது. கடைசி லீக் போட்டியில் அக்டோபர் 8ஆம் தேதி டெல்லியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.


Click it and Unblock the Notifications