செஞ்சூரியன் : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் தடுமாறியது. வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதனை அடுத்து முதல் நாளில் 59 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டது. இதில் இந்திய அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதில் சில இந்திய வீரர்கள் தவறான ஷாட்களை ஆடியதால் இந்திய வீரர்கள் விக்கெட்டை இழந்தனர்.

இந்த ஆட்டத்தில் விராட் கோலி 64 பந்துகளை எதிர்கொண்டு 38 ரன்கள் சேர்த்தார். இதில் ஐந்து பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் விராட் கோலி புதிய சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிள் 2019 ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டு வருகிறது. இந்த சைக்கிளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா படைத்திருந்தார்.அவர் 42 இன்னிங்ஸில் 2097 ரன்களை அடித்திருந்தார்.
தற்போது விராட் கோலி 57 இன்னிங்ஸில் இந்த சாதனை முறியடித்து தற்போது 2101 ரன்களை அடித்திருக்கிறார். இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் புஜாரா இருக்கிறார். அவர் 62 இன்னிங்ஸில் 1769 ரன்கள் அடித்திருக்கிறார். நான்காவது இடத்தில் ரஹானே 49 இன்னிங்சில் 1589 ரன்களும், ஐந்தாவது இடத்தில் ரிஷப் பன்ட் 1575 ரன்களும் அடித்திருக்கிறார்கள்.
ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சினின் சாதனை எல்லாம் முறியடித்த விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெறும் 29 சதங்கள் தான் அடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டில் ஜொலித்தது போல் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலிக்கவில்லை. இதனால் வரும் ஆண்டுகளில் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாட விராட் கோலி முடிவெடுத்திருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் சச்சினின் சதம் சாதனையை முறியடித்துள்ள கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அந்த ரெக்கார்டை உடைக்க வேண்டும் என்றால் 22 சதங்கள் அடிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.