டெல்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சிறப்பாக தயாராகுவோம் என்றும், ரசிகர்கள் மற்றும் சோசியல் மீடியாவில் இருந்து வரும் அழுத்தங்களை பற்றி கண்டு கொள்ளப் போவதில்லை என்றும் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடரின் 9வது லீக் போட்டியில் ஆஃப்கானிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஆஃப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஷாகிதி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் பேட்டிங் ஆடிய ஆஃப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 272 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக கேப்டன் ஷாகித் 80 ரன்களும், அஸ்மத்துல்லா 62 ரன்களும் விளாசினர்.

இந்திய அணி தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 2 ரன்களையும் வீழ்த்தினார்.இதன்பின் பேட்டிங் ஆடிய இந்திய அணி ரோகித் சர்மாவின் அபாரமான சதத்தால் 35 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ரன்கள் சேர்த்து வெற்றிபெற்றது. சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 84 பந்துகளில் 131 ரன்களும், விராட் கோலி 56 பந்துகளில் 55 ரன்களும் எடுத்தனர்.
சதம் விளாசிய ரோகித் சர்மா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன்பின் ரோகித் சர்மா பேசுகையில், இது எங்களுக்கு மிகச்சிறந்த வெற்றியாக உள்ளது. உலகக்கோப்பை தொடரின் தொடக்கத்திலேயே உத்வேகம் பெறுவது மிக முக்கியம். ஒருநாள் கிரிக்கெட்டில் பிரஷரை உணர்ந்து, அதற்கேற்றவாறு சிறந்த முடிவுகளை எடுக்க வேண்டும். இந்திய அணியில் வெவ்வேறு திறமைகளை கொண்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்கள் அனைவரும் அணிக்கு வெவ்வேறு வகையில் அனுபவத்தை கொண்டு வருகின்றனர்.
அதேபோ0ல் வெவ்வேறு திறமை கொண்ட வீரர்கள் இருப்பதன் மூலம் அணியை நல்ல நிலையில் வைக்கவும் உதவியாக உள்ளது. இந்திய அணியில் அச்சமின்றி அதிரடியாக விளையாடும் வீரர்களும் இருக்கிறார்கள். கடந்த போட்டியை போல் அழுத்தத்தை உணர்ந்து, பின்னர் சிறப்பாக வெளியிடும் வீரர்களும் இருக்கிறார்கள்.
பாகிஸ்தான் போட்டியை பொறுத்தவரை வெளியில் இருந்து வரும் அழுத்தத்தை கண்டுகொள்ளப் போவதில்லை. எங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை தான் சிந்திப்போம். அகமதாபாத் மைதானத்தில் விளையாடவுள்ள பிட்ச்சின் தன்மை, அணியின் காம்பினேஷன் என்ன என்பதில் கவனம் செலுத்தலாம். அவை எங்களின் கட்டுப்பாட்டில் இருக்கும். ஒரு அணியாக சிறப்பாக விளையாடுவது மட்டுமே எங்களின் கவனமாக உள்ளது என்று தெரிவித்தார்.