
அமீரகம்
ஐபிஎல் போட்டிகள் மீண்டும் செப்.19 அல்லது செப்டம்பர் 20ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் என்றும், அக்டோபர் 10ம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த 31 போட்டிகளில், 10 போட்டிகள் double headers-ஆகவும் ( ஒரே நாளில் இரண்டு போட்டிகளாக நடத்தப்படும்) 7 போட்டிகள் single headers-ஆகவும், 4 பிளே-ஆஃப் போட்டிகள் என 31 போட்டிகளும் 21 நாளில் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிஎஸ்எல் தொடர்
அமீரகத்தில் அபுதாபி, துபாய், சார்ஜா ஆகிய நகரங்கள் என மொத்த 3 மைதானங்கள் மட்டுமே உள்ளன. வரவிருக்கும் நாட்களில் இங்கு பல்வேறு தொடர்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானின் பிஎஸ்எல் தொடர் அபுதாபியில் ஜூன் மாதம் நடத்தப்படுகிறது. செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில் பாகிஸ்தான் - ஆஃப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் திட்டமிடப்பட்டுள்ளது

இடைபட்ட நாட்கள்
இதனை தொடர்ந்து செப்டம்பர் - அக்டோபர் மாத இடைவெளியில் பாகிஸ்தான் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் அமீரகத்தில் நடைபெறவுள்ளது. அதே போல ஆஃப்கானிஸ்தான் - அயர்லாந்து அணிகளுக்கு இடையே 3 டி20 போட்டிகளை அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உலகக்கோப்பை தொடர்
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் அதிகமாக உள்ளதால், டி20 உலகக்கோப்பை அமீரகத்தில் நடத்த அதிக வாய்ப்புகள் உள்ளது. ஒருவேளை அமீரகத்தில் நடத்துவது உறுதியானால் அக்டோபர் 1ம் தேதி முதல் அமீரகத்தின் அனைத்து மைதானங்களையும் அதற்கு தருவதாக ஐசிசிக்கு அந்நாட்டு அரசு வாக்குறுதி கொடுத்துள்ளது. இதனால் பிசிசிஐ-க்கு செப்டம்பர் - அக்டோபர் மாதத்தில் ஐபிஎல்-ஐ நடத்துவது பெரும் சிக்கலாக உள்ளது.

சேதமடையும் பிட்ச்-கள்
ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அதிகளவில் பேட்டிங்கிற்கு சாதகமாகவும், சிக்ஸர்கள் பறக்கும் வகையிலும் தான் பிட்ச்-கள் ஏற்படுத்தப்படும். ஆனால் அமீரகத்தில் அடுத்து வரும் நாட்களில் அதிகளவில் போட்டிகள் நடைபெறுவதால் பிட்ச்-ன் தன்மையில் சேதம் இருக்கும் எனவும், அது ஐபிஎல் போட்டிகளில் பெரும் பிரச்னையை உண்டாக்கும் எனவும் வல்லுநர்கள் கூறுகின்றனர். எது எப்படியோ ஐபிஎல் தொடர் அமீரகத்தில் தான் நடைபெறுகிறது என இன்னும் பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











