சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் கடைசியாக சென்னை அணி ஆடிய மூன்று போட்டிகளிலுமே கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங் செய்யவே ஆர்வம் காட்டியுள்ளார். இதற்கான காரணத்தை பற்றி பார்க்கலாம்.
சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது. இதுகுறித்து கேப்டன் தோனி பேசுகையில், டாஸின் போது எடுக்கப்பட்ட தவறான முடிவே தோல்விக்கு காரணம். பனிப்பொழிவு இருக்காது என்று நினைத்து தான் முதலில் பேட்டிங் செய்ய நினைத்தோம். ஆனால் இரண்டாம் பாதியில் அதிக பனிப்பொழிவு இருந்தது என்று தெரிவித்தார்.

ஆனால் இந்தப் போட்டியில் மட்டுமல்லாமல் கடந்த மூன்று போட்டிகளாகவே சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பேட்டிங் செய்யவே ஆர்வம் காட்டியுள்ளார். மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பயிற்சியாளர்கள் குழுவால் தோனி தனது முடிவை மாற்றியுள்ளார். ஆனால் டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற தோனி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அந்தப் போட்டியில் டெல்லி அணியின் மோசமான பேட்டிங்கால் சென்னை அணி வெற்றிபெற்றது.
ஆனால் கொல்கத்தா அணிக்கு எதிராக தோனியின் வியூகம் தவறாகியுள்ளது. இதனிடையே தோனி பேட்டிங் செய்ய விரும்புவதற்கான காரணம் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின் டாப் 4 பேட்ஸ்மேன்களான ருதுராஜ், கான்வே, ரஹானே மற்றும் சிவம் துபே ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் வரும் ராயுடு, ஜடேஜா மற்றும் மொயின் அலி ஆகியோர் பெரியளவில் ஃபார்மில் இல்லை. குறிப்பாக ராயுடு 10 இன்னிங்ஸ் வெறும் 122 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.
இதனால் மூன்று பேரையும் பிளே ஆஃப் சுற்று தொடங்குவதற்குள் பேட்டிங்கில் ஃபார்முக்கு கொண்டு வரும் நோக்கில் பேட்டிங் செய்ய விரும்பியுள்ளார். ஆனால் வழக்கம் போல் மூவருமே தோனியை ஏமாற்றியுள்ளனர். நடப்பு சீசனில் ஜடேஜாவின் பேட்டிங் ஃபார்ம் குறித்து அதிகளவிலான விமர்சனங்கள் வருகிறது.
இருப்பினும் தோனி பரிசோதனை முயற்சியை தொடர்ந்துகொண்டே இருக்கிறார். இன்னும் உள்ள ஒரேயொரு போட்டியில் சென்னை அணி வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும். இதனால் தோனி பரிசோதனை முயற்சியை கைவிட்டு வெளிவர வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.