"கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. பாஜக காரியகர்த்தா தான் சென்னை அணிக்கு வெற்றியைத் தேடி தந்துள்ளார்" தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய வார்த்தைகள் இவை. சென்னை அணியின் வெற்றிக்கு ஜடேஜாவே காரணம் என்ற அண்ணாமலையின் பேசியதை பற்றி பார்க்கலாம்.
கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜடேஜா அடித்த சிக்சர், பவுண்டரி சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தது. ஆனால் ஜடேஜாவுக்கு முன் 25 பந்துகளில் 47 ரன்கள் விளாசிய கான்வே, 13 பந்துகளில் 27 ரன்கள் அடித்த ரஹானே, 8 பந்துகளில் 19 ரன்கள் அடித்த ராயுடு, ரஷித் கான் பந்தி இரு சிக்சர்களை அடித்த சிவம் துபே என்று அத்தனை வீரர்களுமே சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு காரணமானவர்கள்.

அதேபோல் சுப்மன் கில் விக்கெட்டை வீழ்த்த காரணமாக இருந்த கேப்டன் எம்எஸ் தோனி, அரைசதம் விளாசிய சாஹாவின் விக்கெட்டை வீழ்த்திய தீபக் சஹர், கடைசி நேரத்தில் ரன் ரேட்டை கட்டுப்படுத்திய பதிராணா என்று சிஎஸ்கேவின் வெற்றிக்கு பெரும் பட்டாளமே காரணமாக அமைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால், 15 போட்டிகளில் 9 போட்டிகளில் வெற்றிபெற்றதால் மட்டுமே சென்னை அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
அப்படி பார்த்தாலும் ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு வகையில் விளையாடி வெற்றிபெற வைத்துள்ளனர். குவாலிஃபையர் முதல் போட்டியில் தோனியின் கேப்டன்சியே சென்னை அணி வெற்றிபெற முழுக்க முழுக்க காரணமாக அமைந்தது. கிரிக்கெட் என்பது 11 வீரர்களால் களத்தில் விளையாடப்படும் விளையாட்டு என்பதை மறந்து, தன் கட்சிக்காரரால் மட்டுமே சென்னை அணிக்கு வெற்றி கிடைத்தது என்று சொல்வதை ஜடேஜாவே ஒத்துக் கொள்ளமாட்டார்.
அதேபோல் 2வது ஓவரிலேயே சுப்மன் கில்லை வீழ்த்த தோனி செய்த வியூகம், அவரை ஒரு நிமிடம் உலுக்கிவிட்டது. அதுவே சுப்மன் கில் 38 ரன்களில் ஆட்டமிழக்க முக்கியக் காரணம் என்று இந்திய வீரர் அஸ்வினே கூறியுள்ளார். மின்னல் வேகத்தில் தோனி அடித்த ஸ்டம்பிங், மழையை முன்பே கணித்து பந்துவீச்சை தேர்வு செய்த யுக்தி, ஸ்பின்னர்களை வெளுக்க சிவம் துபேவை கொண்டு வந்தது, யாரும் ஏலத்தில் எடுக்காத ரஹானேவை வைத்து குஜராத் பந்துவீச்சை சிதறடித்தது என்று தோனியின் கேப்டன்சி இல்லாமல் சென்னை அணியால் கோப்பையை வென்றிருக்கவே முடியாது.
தொடர் முழுவதும் சொதப்பிய அம்பாதி ராயுடுவை பேக் செய்து இறுதிப்போட்டியில் விளையாட வைத்தது, சாஹாவுக்கு சரியான ஃபீல்டிங் செட் செய்து வீழ்த்தி காட்டியது, தீக்சனாவின் பலம் அறிந்து பவர் பிளேவில் கொண்டு வந்தது, அனைவரும் விமர்சித்த துஷார் தேஷ்பாண்டேவை பர்பிள் கேப் போட்டியில் முன்னணிக்கு கொண்டு வந்தது, இவ்வளவு ஏன் முதல் சில போட்டிகளில் பேட்டிங்கில் சொதப்பிய ஜடேஜா மீது நம்பிக்கை வைத்து தனக்கு முன் களமிறக்கியது என்று சிஎஸ்கே வீரர்களின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் பின்னால் தோனி என்னும் மாயக்காரனின் மூளை ஒன்று உள்ளதை தன் வசதிக்காக சிலர் மறந்துவிடுகிறார்கள்.
மேலும், கிரிக்கெட் நிர்வாகிகள், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அரசியலில் இருந்தாலும், வெற்றிபெற்ற கிரிக்கெட் வீரரை ஒரு கட்சிக்காரராக அடையாளப்படுவத்துவது தமிழ்நாட்டில் இதுவே முதல்முறை என்றும், ஒரு அணியின் வெற்றிக்கு ஒரு வீரரை மட்டுமே அதுவும் தன் கட்சிக்காரை மட்டும் குறிப்பிடுவது தவறு என்றும் கிரிக்கெட் விமர்சகர்களும், வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.