ஹராரே: ஜிம்பாப்வேயில் இருக்கும் கேப்டன் டோணி அந்நாட்டு போலீசாரின் பைக்கை ஓட்டியுள்ளார்.
கூல் கேப்டன் டோணிக்கு கார்கள், பைக்குகள் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் குறிப்பாக அதிவேக பைக்குகள் என்றால் டோணிக்கு உயிர். அவரிடம் 20 அதிவேக பைக்குகள் உள்ளன. ஓய்வு நேரத்தில் சப்தமில்லாமல் பைக்கை எடுத்துக் கொண்டு ராஞ்சியின் தெருக்களில் செல்வார்.
இது ராஞ்சி மக்கள் அறிந்ததே. டோணி தான் பைக்குடன் இருக்கும் புகைப்படங்களை ட்விட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். டோணி தற்போது ஜிம்பாப்வேயில் உள்ளார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று டோணி தலைமையிலான இந்திய அணி தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்நிலையில் டோணி ஜிம்பாப்வே போலீசாரின் கவாசாகி பைக்கை பார்த்ததும் அதை ஓட்டிப் பார்க்கும் ஆசை பிறந்துள்ளது. இதையடுத்து போலீசாரிடம் அந்த பைக்கை வாங்கி ஒரு ரவுண்ட் வந்துள்ளார்.
போலீசாரின் பைக்கில் அமர்ந்தபடி எடுக்கப்பட்ட புகைப்படத்தை டோணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை ஆயிரக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.