மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி 151 ரன்கள் எடுத்திருந்த போது, திடீரென எம்எஸ் தோனி பேடை கட்டியதால், ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் தோனியின் பெயரை சொல்லி அதிர வைத்தனர்.

மும்பை - சென்னை அணிகளுக்கு இடையிலான எல் கிளாசிகோ ஐபிஎல் போட்டி நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 157 ரன்கள் மட்டுமே சேர்த்தது. சென்னை அணியின் ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், சான்ட்னர் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் ரஹானே 27 பந்துகளில் 61 அரைசதம் விளாசி ஆட்டமிழந்தார்.

அதேபோல் இறுதிவரை களத்தில் இருந்த ருதுராஜ் கெய்க்வாட், 36 பந்துகளில் 40 ரன்கள் அடித்து அசத்தினார். இதன் மூலம் சென்னை அணி 18.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்து அபார வெற்றியை வான்கடே மைதானத்தில் பதிவு செய்தது. இந்த வெற்றியால் சென்னை அணி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ரஹானேவின் எதிர்பாராத அதிரடி, ஜடேஜாவின் அசாத்திய கேட்ச், சான்ட்னரின் சிறப்பான பந்துவீச்சு என்று ரசிகர்களின் மனதில் அந்த சம்பவங்கள் ஓடிக் கொண்டே இருக்கிறது.

இதனிடையே நேற்றைய ஆட்டத்தின் போது சென்னை அணி வெற்றிக்கு அருகே வந்த போது, திடீரென ஒட்டுமொத்த வான்கடே மைதானமும் தோனி.. தோனி.. தோனி என்று ஒரே குரலில் ஒலி எழுப்பி அதிர வைத்தது. சென்னை 151 ரன்கள் எடுத்திருந்த போது ஓய்வறையில் இருந்த தோனி, திடீரென தனது இரு கால்களிலும் பேடை கட்டினார். ஒருவேளை விக்கெட் விழுந்தால் களமிறங்கலாம் என்ற முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாகவே அவரின் செயல் இருந்தது.

ஆனால் தோனி காலில் பேடை கட்டுவதை தொலைக்காட்சியில் காட்டியதால், வான்கடே மைதானத்தில் மும்பை ஜெர்சி அணிந்திருந்த ரசிகர்கள் கூட "We Want Dhoni" என்று ஆர்ப்பரிக்க, அந்த ஒரு நிமிடத்தில் சென்னை சேப்பாக்கத்தில் இருந்த உணர்வை ரசிகர்கள் ஏற்படுத்தினர். மும்பை ஃபேன் ஸ்டாண்ட், ரசிகர்களுக்கு இலவச மும்பை கொடி, இலவச ஜெர்சி என்று மும்பை அணி நிர்வாகம் கொடுத்தும், சென்னை அணியின் ரசிகர்கள் வான்கடே மைதானத்தில் ஆதிக்கம் செலுத்தியது சிஎஸ்கே அணியின் பலத்தை காட்டுவதாக ரசிகர்கள் பெருமிதம் தெரிவித்து வருகின்றனர்.