மும்பை: ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் அபிமன்யூ ஈஸ்வரன் மற்றும் பிரியங்க் பஞ்சால் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி வரும் 12ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் ஐந்து டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. டெஸ்ட் போட்டிக்கு ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு பின் சீனியர் வீரர்கள் நீக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.

ஆனால் புஜாராவை மட்டும் நீக்கியுள்ள தேர்வுக் குழு விராட் கோலி, ரஹானே உள்ளிட்டோரை மீண்டும் தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அஜிங்கியா ரஹானே துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடிய யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்டோர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். குறிப்பாக டாப் ஆர்டரில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் நிச்சயம் களமிறங்குவார் என்று எதிபார்க்கப்படுகிறது.
அதேபோல் ரஞ்சி டிராபி மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களுக்கு பிசிசிஐ வழக்கம் போல் அதிர்ச்சியையே கொடுத்துள்ளது. சர்ஃப்ராஸ் கான், ஹனுமா விஹாரி, அபிமன்யூ ஈஸ்வரன், பிரியங்க் பஞ்சால் உள்ளிட்ட வீரர்களில் ஒருவர் கூட தேர்வு செய்யப்படவில்லை. அதிலும் வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகிய போது அவருக்கு பதிலாக அபிமன்யூ ஈஸ்வரன் தான் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
பின்னர் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு ரோகித் சர்மா திரும்பியதால், அவர் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இந்த நிலையில் ருதுராஜ் கெய்க்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால் உள்ளிட்ட டாப் ஆர்டர் வீரர்களை தேர்வு செய்துள்ள இந்திய அணி, அபிமன்யூ ஈஸ்வரனையும் பிரியங்கா பஞ்சாலையும் ஏன் சேர்க்கவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஏனென்றால் ரஞ்சி டிராபி தொடரில் ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் சராசரி சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. அவ்வப்போது சில இன்னிங்ஸ்களில் மட்டுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் அபிமன்யூ ஈஸ்வரனோ ரஞ்சி டிராபி தொடரில் அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறார். இதனால் விரக்தியடைந்த ரசிகர்கள், ரஞ்சி டிராபி தொடர் நடத்துவதை பிசிசிஐ நிறுத்திவிடலாம் என்று காட்டமாக விமர்சித்து வருகின்றனர்.