விக்கெட்கள் வீழ்த்திய ஷமி
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷமி அதிக ரன்களை விட்டுக் கொடுத்தார். 10 ஓவர்களில் 81 ரன்கள் கொடுத்தார். 2 விக்கெட்கள் வீழ்த்தினார். அந்த இரண்டு விக்கெட்களும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள். இரண்டாவது ஒருநாள் போட்டியில், 10 ஓவர்களில் 59 ரன்கள் விட்டுக் கொடுத்தார் ஷமி. இந்த போட்டியில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். இதுவும் துவக்க வீரர் விக்கெட் தான்.
உமேஷ் யாதவ் என்ன செய்தார்?
தனிப்பட்ட முறையில் ஷமி சரியாக பந்துவீசவில்லை என நாம் கூறலாம். அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தார் என குறை கூறி அவரை வெளியேற்றலாம். ஆனால், ஷமியை போலவே அதிக ரன்கள் விட்டுக் கொடுத்த உமேஷ் யாதவ், விக்கெட்கள் வீழ்த்த திணறும் நிலையில் அவரை அடுத்த மூன்று போட்டிகளுக்கு அணியில் சேர்த்துள்ளனர்.
கடைசி ஓவரில் உமேஷ்
மேலும், இரண்டாவது போட்டி டையில் முடிய உமேஷ் யாதவும் ஒரு காரணம். கடைசி ஓவரில் 14 ரன்கள் எடுத்தால் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெறும் என்ற நிலையில், அந்த ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். அந்த ஓவரில் இரண்டு பவுண்டரிகள் கொடுத்தார் உமேஷ். இவர் கட்டுக்கோப்பாக பந்து வீசி இருந்தால் இந்தியா வென்று இருக்கலாம். ஒருவேளை ஷமி கடைசி ஓவரை வீசி இருந்தால் போட்டியின் முடிவு மாறி இருக்கலாம்.
ரசிகர்கள் கேட்கும் கேள்வி
இது ரசிகர்கள் இடையே கோபத்தை கிளப்பிவிட்டுள்ளது. புதிய பந்தில் விக்கெட் வீழ்த்துவது என்பது ஒரு தனித் திறமை. ஷமி அந்த விஷயத்தில் சிறப்பாக செயல்படுகிறார். முதல் போட்டியில் அதிக ரன்கள் கொடுத்த ஷமி சுதாரித்து இரண்டாவது போட்டியில் ஓரளவு குறைவாக ரன்கள் கொடுத்தார். ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது.மேலும், இரண்டு அணியின் வேகப் பந்துவீச்சாளர்களும் ரன்களை வாரி இறைத்தனர் என்பதையும் மறுக்க முடியாது. இந்த நிலையில், உமேஷ் யாதவ் எந்த வகையில் சிறப்பாக செயல்பட்டார் என அவரை அணியில் சேர்த்துள்ளனர் என்பதே ரசிகர்கள் கேட்கும் கேள்வி. கேப்டனின் விருப்பமான வீரரை தேர்வு செய்யவே ஷமி நீக்கப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகிறது.