தொடக்க வீரராக யஷஸ்வி ஜெய்ஸ்வால்.. மிடில் ஆர்டரில் சுப்மன் கில்.. இந்திய அணிக்கு சரியா வருமா?
டாமினிக்கா: அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 14 போட்டிகளில் விளையாடிய யஷஸ்வி ஜெய்வால் ஒரு சதம் உட்பட 625 ரன்களை விளாசி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். ஐபிஎல் தொடர் மட்டுமல்லாமல் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களிலும் தொடர்ச்சியாக 2 ஆண்டுகள் சிறப்பாக விளையாடியதே இந்திய அணிக்கு அவர் தேர்வு செய்யப்பட்டதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சீனியர் வீரர்களை மட்டுமே நம்பி இந்திய டெஸ்ட் அணி உள்ள நிலையில், இளம் வீரர்களை தயார் செய்ய வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. கடந்த முறை இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது 21 வயதான இளம் வீரரான பீட்டர்சன், இந்திய அணியின் தோல்விக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

அதேபோல் இந்திய அணி இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலை பயன்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன. யஷஸ்வி ஜெய்ஸ்வால் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவதன் மூலம் டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேனுக்கு தேவையும் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அணி வரிசையில் ஜடேஜா மற்றும் ரிஷப் பண்ட் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன்களாக உள்ளனர்.
அவர்களும் 6 மற்றும் 7 ஆகிய பேட்டிங் வரிசையில் களமிறங்குவதால், டாப் ஆர்டரில் இந்திய பேட்டிங் வரிசையில் பலவீனமாக இருப்பதாக பார்க்கப்பட்டது. அதேபோல் நிதானமாக ஆடும் இந்திய அணியின் டாப் ஆர்டர் ஜெய்ஸ்வால் போன்ற அதிரடி வீரர்கள் கொண்டு வரப்படுவதால், சூழலுக்கு ஏற்ப மாறி விளையாடுவதற்கு வசதியாக இருக்கும்.
பயிற்சிப் போட்டியில் கூட யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடக்க வீரராக களமிறக்கப்பட்ட நிலையில், விரைந்து அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதனால் சுப்மன் கில் மிடில் ஆர்டரில் விளையாடுவதே சரியானதாக இருக்கும். நல்ல உயரமும், விரிஸ்ட் பவரும் சுப்மன் கில்லுக்கு இருப்பதால், சுப்மன் கில் சாதாரணமாகவே மிடில் ஆர்டர் வீரருக்கான அத்தனை வலிமையையும் பெற்றுவிடுகிறார்.
விராட் கோலி இருக்கும் வரை 3வது இடத்திலும், விராட் கோலி ஓய்வுபெற்ற பின் 4வது இடத்திலும் சுப்மன் கில் களமிறங்கலாம். இந்தியா ஏ மற்றும் யு19 அணிகளில் சுப்மன் கில் மிடில் ஆர்டர் வரிசையில் ஆடிய அனுபவமும் உள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் மாற்றம் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications