மிர்பூர்: வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி டிராவில் முடிவடைந்த நிலையில் சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் ஒருநாள் போட்டியில் வங்கதேசம் வென்றது.
இந்த நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி மிர்பூரில் நடைபெற்றது. வங்கதேச அணி சொந்த மண்ணில் வெற்றி பெறுவதற்காக ஆடுகளத்தை சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக அமைத்தது.இதனால் கடுப்பான வெஸ்ட் இண்டீஸ் இன்றைய ஆட்டத்தில் 50 ஓவர்கள் முழுவதையும் சுழற் பங்குவீச்சாளர்களை வைத்து வீசியது.

இதன் மூலம் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்ஸ் முழுவதுமே ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் வீசியது இதுவே முதல் முறையாகும். டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி வெஸ்ட் இண்டீஸ் அணியின் இந்த பந்துவீச்சை கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் தட்டு தடுமாறியது.
அந்த அணியில் சௌமியா சர்க்கார் மட்டும் 89 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ரிசாத் உசைன் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் என 14 பந்துகளில் 39 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வங்கதேச அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கியது.
இதில் தொடக்க வீரர் ஏத்தன்சே 28 ரன்களில் ஆட்டமிழக்க, பிராண்டன் கிங் டக் அவுட்டாக, கேசி கார்ட்டி 35 ரன்களும், கேப்டன் சாய் ஹோப் 53 ரன்களும் எடுத்தனர். எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் போட்டி சமனில் முடிவடைந்தது.
இதன் அடுத்து சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 10 ரன்களை எடுத்தது. இதன் அடுத்து வங்கதேச அணி களம் இறங்கியது. அப்போது வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகேல் ஹூசைன் இரண்டு ஓயிடு ஒரு நோ பால் என வீச வங்கதேச அணியில் வெற்றி எளிதாகும் என எதிர்பார்த்தனர். ஆனால் 10 ரன்கள் கூட எடுக்க முடியாமல் வங்கதேச அணி 1 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.