சட்டோகிராம்: வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று ஒருநாள் மற்றும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் ஒரு நாள் தொடரில் வங்கதேச அணி வெற்றி பெற்ற நிலையில், டி20 தொடரை தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றி இருக்கிறது.
முதல் டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வென்ற நிலையில் இரண்டாவது t20 போட்டி இன்று சட்டோகிராமில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய பிராண்டன் கிங் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார்.

எனினும் இரண்டாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஏத்தன்ஷி மற்றும் சாய் ஹோப் ஆகியோர் அபாரமாக விளையாடி இருவரும் அடுத்தடுத்து அரை சதம் கடந்தனர். ஏத்தன்சி 52 ரன்களிலும், கேப்டன் சாய் ஹோப் 55 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.இதனால் வங்கதேச அணியின் ஸ்கோர் உயர்ந்தது.
எனினும் முக்கிய கட்டத்தில் நடுவரிசையில் ஷஃபான் ருத்தர்போர்ட், ரோமன் போவல் மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ராஸ்டன் செஸ் 17 ரன்களிலும், ரொமாரியோ செபர்ட் 13 ரன்களும் எடுக்க வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்தது.
இதை அடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேச அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் சையிப் ஹசன் ஐந்து ரன்களில் ஆட்டம் இழக்க மற்றொரு தொடக்க வீரரான தன்சீத் ஹசன் அபாரமாக விளையாடி 48 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, மூன்று சிக்சர் அடங்கும்.
கேப்டன் லிட்டன் தாஸ் 23 ரன்களிலும் தவ்ஹீத் ஹிர்தாய் 12 ரன்களிலும் ஜேக்கர் அலி 17 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 124 ரன்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்த நிலையில் அதன் பின் களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனால் 20 ஓவர் முடிவில் வங்கதேச அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தரப்பில் ரொமாரியோ செஃபர்ட் மற்றும் அக்கீல் உசேன் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது டி20 போட்டி வரும் வெள்ளிக்கிழமை இந்திய நேரப்படி ஐந்து முப்பது மணிக்கு நடைபெறுகிறது.