மும்பை : ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் எந்த விவகாரம் குறித்தும் கருத்து தெரிவிக்க மாட்டார்கள். குறிப்பாக அரசியல், மத சம்பந்தப்பட்ட விஷயங்கள் என எந்த விவகாரத்திலும் எந்த பேட்டியையும் கருத்தையும் தெரிவிக்க கூடாது என்று பிசிசிஐ ஒப்பந்தத்தில் அறிவுறுத்தப்பட்டிருக்கும்.
ஆனால் தற்போது நாட்டில் நடைபெறும் சில விஷயங்களை தங்களுக்கு சாதகமாக கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்துகிறார்கள் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் முன்னால் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சிலர் மதத்தை வைத்து வீரர்களை பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாட்டில் தற்போது ஒரு கட்சி ஒரு விஷயத்தை விரும்புகிறது என்றால் அதைப் பற்றி நாமும் பேசினால் நமக்கு அணியில் இடம் கிடைத்துவிடும் என்று சில கிரிக்கெட் வீரர்கள் இவ்வாறு செய்கிறார்களா என்று தெரியவில்லை. உதாரணத்திற்கு இந்திய டெஸ்ட் அணியில் விக்கெட் கீப்பராக இடம் பிடிக்க கே எஸ் பரத் போராடி வந்தார்.
இந்த நிலையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் போட்டியில் அவர் சதம் அடித்தார். அப்போது மதரீதியான சில செயலை கே எஸ் பரத் செய்து காட்டினார். அப்போது ரசிகர்கள் சிலர் கே எஸ் பரத்துக்கு தான் இந்திய அணியில் இடம் கொடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தள மூலம் அழுத்தம் கொடுத்தனர். அப்போது சிலர் கே எஸ் பரத் வேண்டுமென்றே இதை செய்வதாக விமர்சனமும் எழுந்தது.
இதேபோன்று துருவ் ஜூரலை நான்காவது டெஸ்ட் போட்டியில் அபாரமாக விளையாடி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த நிலையில் பத்திரிக்கையாளர் ஒருவரிடம் மதரீதியான சில கருத்தை தெரிவித்து இருக்கிறார். இதில் எந்த தவறும் இல்லை என்றாலும் மத அரசியலுக்கு வழிவகுக்கும் செயலில் துருவ் ஜுரல் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு இருந்தது.
கடந்த ஐபிஎல் போட்டி முடிவடைந்த பிறகு குஜராத் அணியில் உள்ள யாஷ் தயால் என்ற வீரர் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்ட மதத்தை கேலி செய்யும் விதமாக ஒரு பதிவை போட்டு இருந்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை எடுத்து குஜராத் அணி நிர்வாகம் அவருக்கு கடும் எச்சரிக்கை கொடுத்ததை எடுத்து அவர் பகிரங்க மன்னிப்பு கேட்டிருந்தார்.
இதேபோன்று கிரிக்கெட் வீரர் சப்ராஸ்கான் அறிமுக போட்டியின் போது நடந்த விஷயங்களை ரசிகர்களின் சிலர் பல சர்ச்சையான கருத்துக்களை கூறியிருந்தனர். இதனை ஆமோதிக்கும் விதமாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக்கும் வெளிப்படையாகவே சர்ப்ராஸ்கான் விமர்சித்து டிவிட் போட்டு இருந்தார். இது மத அரசியலை கிரிக்கெட்டுக்குள் புகுத்தும் விஷயமாக பார்க்கப்படுகிறது.
இதனால் முன்னாள் வீரர்கள் மற்றும் ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்கள் யாரும் மதத்தை வைத்து பிளவுபடுத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது என்று பிசிசிஐ எச்சரிக்கை கொடுக்க வேண்டும் என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். மேலும் ஒரு காலத்தில் சச்சின் டெண்டுல்கர் போன்ற வீரர்கள் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் விளம்பரங்களில் நடித்ததாகவும் அதே போன்று ஒரு விளம்பரத்தை பிசிசிஐ எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளது.