பெங்களூர் : WPL தொடருக்கான தொடக்க விழாவில் பாலிவுட் உச்ச நட்சத்திரமான ஷாரூக் கான் கலந்து கொண்ட நடனமாடியதோடு, 5 அணிகளின் கேப்டன்களையும் அறிமுகம் செய்து வைத்தார்.
மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2வது சீசன் இன்று தொடங்கியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் தொடக்க விழாவில் பாலிவுட் நட்சத்திரங்களான கார்த்திக் ஆர்யன், வருண் தவான், டைகர் ஷெராஃப், சித்தார்த் மல்ஹோத்ரா ஆகியோர் ஹிட் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினர். தொடர்ந்து ஷாகித் கபூர் பைக்கில் எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தொடர்ந்து பாலிவுட் பாட்ஷா என்று கொண்டாடப்படும் ஷாரூக் கான் மகளிர் பிரீமியர் லீக் தொடர் நடத்துவதற்கான நோக்கத்தை குறிப்பிட்டு பேசியதோடு, பதான் மற்றும் ஜவான் பாடல்களுக்கு நடனமாடி அசத்தினார். அதுமட்டுமல்லாமல் மகளிர் பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் டெல்லி அணியின் கேப்டன் மெக் லானிங், யுபி வாரியர்ஸ் கேப்டன் அலைசா ஹேலி, குஜராத் அணி கேப்டன் பெத் மூனி, ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரை அறிமுகம் செய்து வைத்தார்.
தொடர்ந்து மும்பை அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுரை கோப்பையுடன் வரவேற்றார். இதனையடுத்து அனைவருடனும் குரூப் புகைப்படம் எடுத்த ஷாரூக் கான், பாலிவுட் நடிகர்கள் அனைவரையும் மேடைக்கு அழைத்து நன்றி கூறினார். பின்னர் மகளிர் பிரீமியர் லீக் நிர்வாகிகள், பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டனர்.
இன்று நடக்கும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து டெல்லி அணி களமிறங்குகிறது. இந்த மகளிர் பிரீமியர் லீக் தொடர் மொத்தமாக 24 நாட்களில் 22 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இன்று தொடங்கி மார்ச் 17ஆம் தேதி இறுதிப்போட்டி நடக்கவுள்ளது. அதேபோல் மகளிர் பிரீமியர் லீக் தொடரை பிரபலப்படுத்தும் வகையில் இந்த சீசனின் அனைத்து போட்டிகளும் பெங்களூர் மற்றும் டெல்லியில் நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.