WTC 2025- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் வாய்ப்பை இழந்த இந்தியா.. ஆஸி,தென்னாப்பிரிக்கா பைனலில் மோதல்
சிட்னி : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதன் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த நிலையில் முதல் அணியாக தென்னாப்பிரிக்கா தகுதி பெற்றது. இரண்டாவது இடத்தைப் பிடிக்கப் போவது யார் என்று கேள்வி எழுந்தது. இந்திய அணி கடந்த இரண்டு முறையாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் தொடருக்கு தகுதி பெற்றிருந்த நிலையில் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் சாதனை நிகழ்த்துமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகளை சொந்த மண்ணில் இந்திய அணி இழந்தது மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாலில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதால் ரசிகர்கள் மத்தியில் நம்பிக்கை பிறந்தது. ஆனால் அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை கண்டதன் மூலம் தற்போது இந்திய அணி பைனலுக்கு தகுதி பெரும் வாய்ப்பை இழந்துவிட்டது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா அணி 66.67 வெற்றி சதவீதத்துடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா அணி 63. 73 வெற்றி சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இந்திய அணி 50 வெற்றி சதவீதத்துடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 48.21 வெற்றி சதவீதத்துடன் நான்காம் இடத்திலும், இலங்கை அணி 45.45 வெற்றி சதவீதத்துடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு இன்னும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இலங்கைக்கு எதிராக எஞ்சி இருக்கிறது. ஆனால் தற்போது இந்தியா தோல்வியை தழுவி இருப்பதால் இனி அந்த டெஸ்ட் தொடர் சமீபிரதாய ஆட்டமாக தான் ஆஸ்திரேலியாவுக்கு இருக்கும். ஆஸ்திரேலிய அணிக்கு ஓவர்ரேட் தொடர்பாக புள்ளிகள் குறைக்கப்பட்டாலும், அந்த அணி பைனலுக்கு செல்வது உறுதியாகிவிட்டது. இதனால் இந்திய அணிக்கு இனி எந்த ஒரு வாய்ப்பும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு கிடையாது.


Click it and Unblock the Notifications