சென்னை: 3-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8 அணிகளில் நடப்பு சாம்பியன் சென்னையின் எப்.சி.யும் ஒன்று. கடந்த இரு சீசனில் சென்னை அணியின் பயிற்சியாளராக இத்தாலி முன்னாள் வீரர் மார்க்கோ மெட்டராசி செயல்பட்டார். இந்த நிலையில் 3-வது ஐ.எஸ்.எல். சீசனுக்கும் அவர் சென்னை அணியின் பயிற்சியாளராக தொடர இருப்பதாக அணி நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், ஜமைக்கா நாட்டு சர்வதேச அணியின் கோல் கீப்பராக உள்ள துவைன் கெர் இந்தாண்டு தொடரில் சென்னைக்காக ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
29 வவயதாகும் கெர், ஐஸ்லாந்து நாட்டின் ஸ்ட்ஜர்னன் அணிக்காக ஆடிவந்த நிலையில், அந்த ஒப்பந்தம் நிறைவடைந்தது. எனவே அவர் சென்னைக்காக ஆட முன்வந்துள்ளார். முன்னதாக இவர், நார்வே நாட்டு உள்நாட்டு கால்பந்தாட்ட அணிக்காகவும் ஆடிய அனுபவம் உள்ளவர்.
2015 மற்றும் 2016ம் ஆண்டு நடைபெற்ற கோபா அமெரிக்கா எனப்படும் புகழ்பெற்ற கால்பந்தாட்ட தொடரில் ஜமைக்கா அணிக்காக ஆடிய அனுபவமும் இவருக்கு உள்ளது.
"கெர் ஐரோப்பா மற்றும் சர்வதேச அளவில் அதிக ஆட்டங்களில் பஹ்கேற்றுள்ள அனுபவம் உள்ளவர். சென்னை அணி தனது கோப்பையை தக்க வைத்துக்கொள்ள அவரது அனுபவம் உதவும்" என்று கூறுகிறார் மார்க்கோ மெட்டராசி .
ஒலிம்பிக், தங்க மகன் உசேன் போல்ட் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.