பெங்களூரு : பெங்களூரு புல்ஸ் - பாட்னா பைரேட்ஸ் ஆடிய போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. வெறும் 1 புள்ளியில் வெற்றி நிர்ணயிக்கப்பட்டது.
பெங்களூரு அணியில் பவன் செஹ்ராவத் மற்றும் பாட்னா அணியில் பர்தீப் நார்வால் என இரண்டு நட்சத்திர ரெய்டர்கள் மோதிய போட்டி என்பதால் இந்த போட்டிக்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
முதல் பாதியில் பாட்னா பைரேட்ஸ் அணியின் டிஃபன்ஸ் சிறப்பாக இருந்தது. அதனால், பெங்களூரு ரெய்டர் பவன் செஹ்ராவத் என்ன செய்தும் பலனளிக்கவில்லை. மறுபுறம், பர்தீப் நார்வால் புள்ளிகளை அள்ளினார்.
PKL 2019 : மீண்டும் மிரட்டிய நவீன் குமார்.. கடைசி நிமிடத்தில் ஜெய்ப்பூரை வீழ்த்திய டெல்லி!
முதல் பாதியில் பெங்களூரு அணியின் கேப்டன் ரோஹித் குமார் ரெய்டுகளில் கோட்டை விட்டார். முதல் பாதி முடிவில் 22 - 16 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது பாட்னா பைரேட்ஸ்.
இரண்டாம் பாதியிலும் பாட்னா பைரேட்ஸ் அணி முன்னிலையை தொடர்ந்தது. அப்போது பெங்களூரு அணியின் ரோஹித் குமார் சுதாரித்தார். ரெய்டுகளில் புள்ளிகளை அள்ளினார். கடைசி நான்கு நிமிடங்கள் இருக்கும் போது பாட்னா அணியை ஆல் அவுட் செய்தது பெங்களூரு அணி.
பவன் செஹ்ராவத் அதிரடியால் கடைசி நேரத்தில் 38 - 38 என்ற சமநிலையை எட்டி, பின்னர் 40 - 39 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றியும் பெற்றது பெங்களூரு புல்ஸ்.
முதல் பாதியில் கலக்கினாலும், இரண்டாம் பாதியில் கோட்டை விட்ட பாட்னா அணி, கைக்கு கிடைத்த வெற்றியை பறி கொடுத்தது. பெங்களூரு அணி சொந்த மண்ணில் வெற்றி பெற்றது. புள்ளிப் பட்டியலில் இரண்டாம் இடத்தை பிடித்தது.