பிர்மிங்கம்: காமன்வெல்த் போட்டியில் இந்திய டேபிள் டென்னிஸ் அணி தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
இங்கிலாந்தின் பிர்மிங்கமில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்திய அணி அடுத்தடுத்து பதக்கங்களை குவித்து வருகிறது.

இன்றைய தினம் லான் பவுல்ஸ், பளுதூக்குதல் ஆகியப்போட்டிகளில் புதிய சரித்திரம் படைத்தனர்.
இந்நிலையில் தற்போது இந்தியாவுக்கு 5வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. ஆடவருக்கான டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டி இரவு நடைபெற்றது. இந்தியா - சிங்கப்பூர் அணிகள் மோதிய இந்த போட்டியில் கடைசி சுற்று வரை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. எனினும் இறுதியில் 11 - 7, 12 - 14, 11 - 3, 11 - 9 என்ற புள்ளிக்கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
முன்னதாக இன்று மாலை லான் பவுல்ஸ் விளையாட்டு போட்டியில் இந்திய அணி வீராங்கனைகள் முதல் முறையாக தங்கப்பதக்கம் வென்று அசத்தினர். பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியை 17 - 10 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய மகளிர் அணி வீழ்த்தினர். இதே போல பளுதூக்குதல் போட்டியில் விகாஸ் தாக்கூர் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
காமன்வெல்த் போட்டியில் தற்போது வரை இந்தியா 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தமாக 12 பதக்கங்களை பெற்றுள்ளது. மேலும் பதக்கப்பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. ஆஸ்திரேலியா 74 பதக்கங்களுடன் முதலிடத்திலும் இங்கிலாந்து 60 பதக்கங்களுடன் 2வது இடத்திலும் உள்ளது.