ஐந்து பேர் யார்?
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, தமிழகத்தை சேர்ந்த பாராலிம்பிக் தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, டேபிள் டென்னிஸ் வீராங்கனை மணிகா பத்ரா, மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகாட் மற்றும் ஹாக்கி வீராங்கனை ராணி ராம்பால் ஆகிய ஐவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
ஒரே ஆண்டில் ஐந்து
ஒரே ஆண்டில் ஐந்து பேருக்கு ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்படுவது இதுவே முதல் முறை. Sஅர்ஜுனா விருதுப் பட்டியலும் வெளியாகி உள்ளது. அதில் கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா, தடகள வீராங்கனை டுட்டீ சந்த், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனு பாக்கர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ரோஹித் சர்மா
ரோஹித் சர்மா கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன் குவித்து இருந்தார். 2019 உலகக்கோப்பை தொடரில் ஐந்து சதங்கள் அடித்து உலக சாதனை செய்தார். கிரிக்கெட் உலகில் தலைசிறந்த துவக்க வீரர்களில் ஒருவராக அறியப்படுகிறார். அதனால் அவருக்கு இந்த ஆண்டு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
நான்காவது கிரிக்கெட் வீரர்
இதுவரை சச்சின் டெண்டுல்கர், தோனி, விராட் கோலி என மூவர் மட்டுமே கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றுள்ளனர். அந்த வரிசையில் நான்காவது வீரராக இணைந்துள்ளார் ரோஹித் சர்மா.
மாரியப்பன் தங்கவேலு
தமிழக பாராலிம்பிக் வீரர் மாரியப்பன் தங்கவேலு சேலம் மாவட்டம் பெரியவடாகம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர் 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றார். 2004 ஆண்டுக்குப் பின் பாராலிம்பிக் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். அதன் காரணமாக அவருக்கு கேல் ரத்னா விருது வழங்கப்பட உள்ளது.
விழா நடப்பது எப்படி?
இந்த ஆண்டு கொரோனா வைரஸ் காரணமாக ஜனாதிபதி கையால் இவர்கள் விருது வாங்க முடியாது. எனினும், வீடியோ முறையில் ஜனாதிபதி முன்னிலையில் விருது அறிவிக்கப்பட்ட வீரர்கள் தங்கள் இடங்களில் இருந்தே விழாவில் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.