அன்று கண்ணீர் விட்டார்.. இன்று தங்கம் வென்றார்! உலக தடகள சாம்பியன்ஷிப்பில் சாதித்த முதல் தாய் ஷெல்லி
தோஹா : ஜமைக்காவை சேர்ந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஷெல்லி ஆன் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்று புதிய சாதனை படைத்தார்.
கத்தார் நாட்டின் தோஹா நகரத்தில் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

அதில் மகளிர் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஜமைக்காவின் ஷெல்லி முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். இது உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஷெல்லி வெல்லும் நான்காவது தங்கம் ஆகும்.
அதை விட சிறப்பான சாதனை அவர் ஒரு தாயாக இருந்து தங்கம் வென்றது தான். ஆம், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் தங்கம் வெல்லும் முதல் தாய் ஷெல்லி தான்.
இந்த 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் ஷெல்லி 10.71 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்தார். அடுத்த இடத்தை பிரிட்டிஷ் வீராங்கனை டினா ஆஷர் ஸ்மித் 10.83 வினாடிகளில் கடந்தார். ஐவரி கோஸ்ட்டை சேர்ந்த மேரி 10.93 வினாடிகளில் போட்டி தூரத்தை கடந்து மூன்றாம் இடத்தை பிடித்தார்.
இரண்டு முறை ஒலிம்பிக் தங்கம் வென்றுள்ள ஷெல்லி, கடந்த 2009, 2013 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தங்கம் வென்றார். அதன் பின் அவர் கர்ப்பம் ஆனார். அப்போது தன் தடகள வாழ்க்கை முடிவுக்கு வந்து விட்டதோ என எண்ணி கவலை அடைந்துள்ளார். கண்ணீர் விட்டுள்ளார்.
ஆனால், அதன் பின் தான் குழந்தைப் பெற்ற பின் போட்டிகளில் பங்கேற்று தங்கம் வெல்வேன் என சபதம் செய்துள்ளார். அதே போல, கருவுற்று இருந்த போதும், குழந்தைப் பேறுக்குப் பின் சில மாதங்களும் லேசான பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
சில மாதங்களுக்குப் பின் முழு வீச்சில் பயிற்சிகளை தொடங்கி பழைய ஷெல்லியாக மாறினார். அதன் விளைவாக தன் இரண்டு வயது குழந்தை கண் முன் உலக தடகள போட்டியில் தங்கம் வென்று அசத்தி இருக்கிறார் ஷெல்லி.
இது ஒரு தாயின் வெற்றி. இந்த நாள் தான் எனக்கு அன்னையர் தினம் என புளகாங்கிதம் அடைந்து தன் வெற்றி பற்றி கூறி இருக்கிறார் ஷெல்லி. வாழ்த்துக்கள் ஷெல்லி!


Click it and Unblock the Notifications