டர்பன்: ஐபிஎல் டுவென்டி-20 தொடரின் அரையிறுதிக்கு பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் என மூன்று தென் இந்திய அணிகளும் முன்னேறியுள்ளன. இன்று நடக்கும் முதல் அரையிறுதியில் டெக்கான் மற்றும் டெல்லி அணிகள் மோதுகின்றன. நாளை நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் சென்னை அணி, பெங்களூரை சந்திக்கிறது.தென் ஆப்ரிக்காவில் நடக்கும் ஐபிஎல் டுவென்டி-20 தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று கடைசி இரண்டு லீக் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் மும்பை, டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி முதலில் பீல்டிங் செய்தது.அதிரடி மன்னன் ஜெயசூர்யா முதல் பந்திலே அவுட்டாகி மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆனால், மறுமுனையில் இருந்த சச்சின் சூப்பராக பேட் செய்தார். 8 பவுண்டரி உட்பட 41 பந்தில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். ரகானே 56 ரன்கள் குவத்தார்.மற்ற வீரர்கள் சுமாராக பேட் செய்ய மும்பை இந்தியன் அணி 20 ஓவரில் 8 விககெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது.அடுத்து பேட் செய்த டெல்லிக்கு கம்பீர் 38 பந்தில் 47 ரன்கள் எடுத்து நல்ல துவக்கம் தந்தார். வார்னர் 15 ரன்கள் எடுத்து அவுட்டானார். மூன்றாவது வீரராக வந்த ஷேவாக், மும்பை பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். 2 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 27 பந்தில் 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். சூப்பராக விளையாடிய டெல்லி அணி 17.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து வென்றது. புள்ளிப்பட்டியலில் கொல்கத்தாவுக்கு ஒரு இடம் முன்னதாக ஏழாவது இடம் பிடித்தது.பெங்களூர் வெற்றி...மற்றொரு போட்டியில் அரையிறுதிக்குள் நுழைய வெற்றி பெற வேண்டிய கட்டாயத்துடன் கும்ளே தலைமையிலான பெங்களூர் அணி, கில்கிறிஸ்டை கேப்டனாக கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணியை எதிர்கொண்டது.முதலில் பேட் செய்த பெங்களூர் அணிக்கு துவக்க வீரர் மணிஷ் பாண்டே சதம் அடித்து கலக்கினார். அவர் 4 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 73 பந்தில் 114 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். டிராவிட் 6, காலிஸ் 5, ரோஸ் டெய்லர் 1 ரன்னுக்கு அவுட்டானார்கள்.பெங்களூர் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்தது. இதை சேஸ் செய்த டெக்கான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 158 ரன்கள் எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. டெக்கான் சார்பில் அதிகபட்சமாக கிப்ஸ் 60 ரன்கள் எடுத்தார்.இந்த வெற்றியை அடுத்து பெங்களூர் 16 புள்ளிகளுடன் புள்ளிபட்டியலில் மூன்றாவது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்து. டெக்கான், பஞ்சாப் அணிகள் தலா 14 புள்ளிகள் பெற்றிருந்த போதிலும் கூடுதல் ரன்விகிதம் வைத்திருந்த டெக்கான் நான்காவது இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தது.இன்று முதல் அரையிறுதி...இன்று இரவு 8.00 மணிக்கு நடக்கும் முதல் அரையிறுதியில் டெக்கான், டெல்லி அணிகள் மோதுகின்றன. நாளை இரவு 8.00 மணிக்கு நடக்கும் இரண்டாவது அரையிறுதியில் சென்னை அணி, பெங்களூரை சந்திக்கிறது. இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் வரும் 24ம் தேதி நடக்கும் பைனலில் மோதும்.