டெல்லி: குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளதால் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் மீது பிசிசிஐ நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் பிரவீன்குமாரும் ஒருவர். ஐபிஎல் டுவென்டி 20 போட்டி தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். உத்தரபிரதேசத்தை சேர்ந்த பிரவீன்குமார் நேற்றிரவு மீரட் நகரில் குடிபோதையில் ரகளை செய்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் டாக்டர் ஒருவரிடம் தகராறு செய்ததாகவும் இது தொடர்பாக போலீஸ்விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் ஒழுங்கீனமாக நடந்துவரும் கிரிக்கெட் வீரர்கள் மீது நடவடிக்கை எடுத்துவரும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிடியில் பிரவீன்குமாரும் சிக்குவார் என்று தெரிகிறது.