டெல்லி: மத்திய நிதியமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் 2026-27 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறைக்குச் சிறப்பான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. விளையாட்டுத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், கடந்த ஆண்டை விட இம்முறை அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது விளையாட்டு ஆர்வலர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் ஆவணங்களின்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கான நிகரச் செலவினம் 45,000 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. கடந்த நிதியாண்டோடு ஒப்பிடுகையில் இது மிகப்பெரிய உயர்வாகும். விளையாட்டு உட்கட்டமைப்பு மற்றும் வீரர்களின் திறனை மேம்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

2025-26 நிதியாண்டில் விளையாட்டுத் துறைக்குச் சுமார் 42,692 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. தற்போது 2026-27 நிதியாண்டில் இந்தத் தொகை சுமார் 45,482 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, கடந்த ஆண்டை விடக் கிட்டத்தட்ட 2,800 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இது விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்குப் பெரும் ஊக்கத்தை அளிக்கும்.
இந்தக் கூடுதல் நிதியானது முக்கியமாக கேலோ இந்தியா போன்ற முதன்மைத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட உள்ளது. நிதியமைச்சர் 10 ஆண்டுகால கேலோ இந்தியா திட்டத்தை அறிவித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதோடு மட்டுமல்லாமல், தரம் வாய்ந்த விளையாட்டு மைதானங்கள் மற்றும் பயிற்சி மையங்களை உருவாக்குவதிலும் கவனம் செலுத்தப்படும்.
இந்தியா சர்வதேச அளவில் பெரிய விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டு வருகிறது. குறிப்பாக 2030 ஆம் ஆண்டு அகமதாபாத் நகரில் 100வது காமன்வெல்த் போட்டிகளை நடத்தவும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்தவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்வதேசத் தரத்திலான மைதானங்கள், வீரர்களுக்கான தங்கும் வசதிகள் மற்றும் உலகத்தரம் வாய்ந்த பயிற்சி உபகரணங்களை வாங்குவதற்கு இந்த நிதி ஒதுக்கீடு பெரிதும் உதவும். நீண்ட கால அடிப்படையில் சொத்துக்களை உருவாக்கும் மூலதனச் செலவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையை வெறும் பதக்கங்களுக்கான இடமாக மட்டும் பார்க்காமல், வேலைவாய்ப்பை உருவாக்கும் ஒரு முக்கியத் துறையாகவும் அரசு கருதுகிறது. விளையாட்டுப் பயிற்சியாளர்கள், விளையாட்டு அறிவியல் நிபுணர்கள், போட்டி மேலாண்மை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் போன்ற பல்வேறு பிரிவுகளில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க இந்த பட்ஜெட் வழிவகுக்கும்.
இந்த நிதி ஒதுக்கீடு இந்திய விளையாட்டுத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் என்றும், சர்வதேச அரங்கில் இந்தியா அதிக பதக்கங்களைக் குவிக்க இது அடித்தளமாக அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.