மும்பை : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியது. இதன் மூலம நடப்பு சீசனின் இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியன் குஜராத் அணி தொடர்ந்து 2வது முறையாக தகுதி பெற்றுள்ளது.
மழையால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து, சாஹா 18 ரன்களும், சாய் சுதர்சன் 43 ரன்களும் எடுத்து வெளியேறினர்.

எனினும் தொடக்க வீரராக களமிறங்கிய சுப்மன் கில் சூறாவளி , அகமதாபாத்தில் மையம் கொண்டு மும்பை அணி சிதற அடித்தது. Dragon ballz யில் வரும் Goku போல், தன்னுடைய பவரை அதிகப்படுத்தி கொண்டே சுப்மன் கில் சென்றார். 32 பந்தில் அரைசதம் கடந்த சுப்மன் கில், 49 பந்துகளில் நடப்பு சீசனில் 3வது முறையாக சதத்தை அடித்தார்.
60 பந்தில் 129 ரன்கள் விளாசிய சுப்மன் கில் ஆட்டமிழக்க, இறுதியில் ஹர்திக் பாண்டியா 13 பந்தில் 28 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட்டு இழப்பிற்கு 233 ரன்கள் எடுத்தது. 234 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ரோகித் சர்மா, 8 ரன்களிலும், வதேரா 4 ரன்களிலும் வெளியேறினார்.

பில்டிங்கின் போது காயம் ஏற்பட்டதால் இஷான் கிஷன் விளையாடவில்லை. கேமிரான் கிரீன் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசி 30 ரன்கள் சேர்க்க, திலக் வர்மா 14 பந்தில் 43 ரன்கள் குவித்தார். மும்பை அணி வீரர்கள் வந்த வேகத்தில் திரும்ப, தனி ஆளாக நின்ற சூர்யகுமார் யாதவ் 38 பந்தில் 61 ரன்கள் விளசினார்.இதில் 7 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, மும்பை அணி 18.2 வது ஓவரில் 171 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் மும்பை அணி தொடரிலிருந்து வெளியேறியது. குஜராத் அணி வீரர் மோகித் சர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிளே ஆப் சுற்றில் 2017ஆம் ஆண்டுக்கு பிறகு மும்பை அணி தற்போது தான் முதல் தோல்வியை தழுவி இருக்கிறது.