மும்பை: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் இளம் வீரர் ஜெய்ஸ்வாலின் அதிரடியான சதத்தால் ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை குவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 42வது லீக் போட்டியில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடி வருகிறது. இந்த போட்டி ஐபிஎல் வரலாற்றில் விளையாடப்படும் 1000வது போட்டி என்பதால் ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் வான்கடே மைதானத்தில் தொடங்கிய போட்டியில், டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து ராஜஸ்தான் அணி சார்பாக ஜெய்ஸ்வால் - பட்லர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் ஓவரிலேயே சிக்சர் விளாசி கணக்கை தொடங்கிய ஜெய்ஸ்வால், மெரிடித் ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசி மிரட்டினார். இதன் காரணமாக 6 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 65 ரன்கள் குவித்தது. தொடர்ந்து பியூஷ் சாவ்லா சுழலில் பட்லர் 18 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த சாம்சன் சிக்சருடன் தொடங்கினார்.

ஆனால் அர்ஷ்த் கான் பந்துவீச்சில் கேப்டன் சஞ்சு சாம்சன் 14 ரன்களில் ஆட்டமிழக்க, 10 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 97 ரன்களை குவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் விளாச, இன்னொரு பக்கம் படிக்கல் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். பியூஷ் சாவ்லா பந்துவீச்சில் சீனியர் வீரர்கள் திணற, இன்னொரு பக்கம் இளம் வீரர் ஜெய்ஸ்வால் பவுண்டரி, சிக்சர் என்று விளாசி தள்ளினார். பின்னர் வந்த ஹோல்டர் 11 ரன்களிலும், ஹெட்மயர் 8 ரன்களிலும், ஜுரெல் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், ஒவ்வொரு ஓவருக்கும் பவுண்டரியும், சிக்ருமாய் விளாசி ராஜஸ்தான் அணியிம் ரன் ரேட்டை ஜெய்ஸ்வால் உயர்த்தி கொண்டே இருந்தார். இதன் காரணமாக 53 பந்துகளில் சதம் விளாசி ஜெய்ஸ்வால் சாதனை படைத்தார். சொந்த மண்ணில் ஜெய்ஸ்வால் சதம் விளாசியதோடு, இந்திய அணிக்கு அறிமுகமாவதற்கு முன் சதம் விளாசிய 6வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.
சதம் விளாசியதற்கு பின் ஜெய்ஸ்வாலின் அதிரடி உச்சத்திற்கு சென்றது. ஆர்ச்சர் வீசிய 19வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய ஜெய்ஸ்வால், கடைசி ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகளை விளாசி தள்ளினார். ஆனால் கடைசி ஓவரின் 3வது பந்தில் ஜெய்ஸ்வால் சர்ச்சைக்குரிய வகையில் மூன்றாம் நடுவரால் அவுட் கொடுக்கப்பட்டார். இதனால் ஜெய்ஸ்வால் 62 பந்துகளில் 124 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியாக அஸ்வின் அடித்த பவுண்டரி காரணமாக ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழந்து 212 ரன்களை குவித்தது.