மும்பை : ஐபிஎல் தொடரில் முதல் முறையாக களமிறங்கியுள்ள சச்சின் டெண்டுல்கர் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் எவ்வாறு பந்துவீசினார் என்பதை காண ரசிகர்கள் ஆர்வமுடன் இருந்தனர். டாஸ் வென்று முதலில் மும்பை அணி பந்துவீசியது. அணியின் முதல் ஓவரையே அர்ஜூன் டெண்டுல்கர் தான் வீசினார்.
அர்ஜூன் பார்ப்பதற்கு நன்கு உயரமாகவும், நல்ல உடல் வலுவுடன் இருக்கிறார். இடது கை வேகப்பந்துவீச்சாளரான அர்ஜூன் டெண்டுல்கர், ஓடி வருவதில் சில பிரச்சினை இருக்கிறது. இதனை அவர் ஆரம்பத்தில் சரி செய்தால், காயமடைவதில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.

முதல் ஓவரில் அர்ஜூன் டெண்டுல்கர் நோ பால், ஓயிடு மற்றும் பவுண்டரி எதும் தரவில்லை. பந்தை இரு புறமும் அர்ஜூன் டெண்டுல்கர் ஸ்விங் செய்தார். ஆனால் அர்ஜூன் டெண்டுல்கரின் வேகம் சுத்தமாக ஆடுகளத்தில் எடுப்படவில்லை. அர்ஜூன் வெறும் 125 கிமீ வேகத்தில் தான் வீசுகிறார். இதனால், அர்ஜூன் டெண்டுல்கர் பந்தை எப்படி ஸ்விங் செய்தாலும், பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுப்பதில்லை.
இதனையடுத்து தனது 2வது ஓவரை வீசும் போது அர்ஜூன் டெண்டுல்கர் கொஞ்சம் பதற்றம் அடைந்தார். இதனால் ஒரு ஓயிடும் வீசினார். அர்ஜூன் வேகம் மிகவும் குறைவு என்பதால், அதனை பயன்படுத்தி கொண்டு தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் தூக்கி அடித்தார்.
இதனைத் தொடர்ந்து அர்ஜூன் ஓவரில் ஒரு சிக்சரும், ஒரு பவுண்டரியும் பறந்தது. இது தான் அர்ஜூனின் முதல் ஐபிஎல் போட்டி என்பதால், இதை வைத்து எந்த மதிப்பீடும் செய்ய முடியாது. எனினும் அர்ஜூன் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். ஆனால் தந்தை புகழை ஈடு செய்ய, அவர் இன்னும் உழைக்க வேண்டும்.