ஐதராபாத் : ஐபிஎல் தொடரில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தொடர்ந்து தன்னுடைய இரண்டாவது போட்டியில் விளையாடினார். முதல் ஆட்டத்தில் சிறப்பாக பந்து வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அர்ஜுன் டெண்டுல்கர், நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக பந்து வீசினார்.
இதில் அர்ஜுன் டெண்டுல்கர் 2.5 ஓவர்களை வீசி 18 ரன்களை விட்டுக் கொடுத்து தனது முதல் விக்கெட்டை கைப்பற்றினார். குறிப்பாக கடைசி ஓவரில் ஹைதராபாத் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் சிறப்பாக பந்துவீசி மும்பையை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்த நிலையில் இது குறித்து பேசிய அர்ஜுன் டெண்டுல்கர் எனது முதல் ஐபிஎல் விக்கெட்டை பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது கையில் என்ன இருக்கிறது அணியினர் வகுத்த திட்டம் என்ன அதனை எப்படி செயல்படுத்துவது என்பதில்தான் என்னுடைய கவனம் இருக்கிறது. இன்றைய ஆட்டத்தில் நான் பந்துகளை கொஞ்சம் ஓயிடாக வீச அணி நிர்வாகம் அறிவுறுத்தியது.
அதன் காரணமாக பேட்ஸ்மேன்கள் பெரிய பவுண்டரி இருக்கும் திசை பார்த்து அடிக்க முயற்சி செய்ய வைக்க வேண்டும். எனக்கு பந்துவீச்சு மிகவும் பிடித்திருக்கிறது. என்னுடைய கேப்டன் எப்போது பந்துவீச சொன்னாலும் நான் அதை செய்ய தயாராக இருக்கிறேன். என் அணி நிர்வாகம் என்ன திட்டம் போடுகிறார்களோ அதில் நான் சிறப்பாக செய்ய முயற்சி செய்கிறேன்.
என்னுடைய தந்தை என்னிடம் கிரிக்கெட் பற்றி நிறைய பேசுவார். அவர் ஒவ்வொரு ஆட்டத்திற்கு முன்பும் வகுக்கப்பட்ட யுக்தி குறித்து பேசுவார். பயிற்சியில் என்ன செய்கிறாயோ அதனை ஆட்டத்தில் செயல்படுத்து என்று அப்பா கூறுவார். நான் தற்போது பந்தை சரியான கோட்டு மற்றும் லென்த்தில் வீச முயற்சி செய்கிறேன்.
பந்து ஸ்விங் ஆனால் அது எனக்கு போனஸ். இல்லையென்றால் பரவாயில்லை என அர்ஜுன் டென்டுல்கர் கூறினார். அர்ஜுன் டெண்டுல்கரின் இந்த பேச்சு அவர் தந்தை எப்படி கிரிக்கெட் குறித்து கையாள்வாரோ அதேபோல் இருப்பதாக நெட்டிசன்கள் பாராட்டியுள்ளனர்.