சென்னை: ஐபிஎல் ஏலத்தில் இன்று வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் மோரிஸ் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டதை இந்திய விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நூதனமாக கலாய்த்துள்ளார்.
சென்னையில் இன்று ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்றது. சாதாரண வீரர்கள் முதல் மிகப் பெரிய ஜாம்பவான்கள் வரை பலரும் ஏலத்தில் விடப்பட்டனர்.

இதில் கிளன் மேக்ஸ்வெல்லுக்கும், கிறிஸ் மோரிஸுக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டது. அதில் மேக்ஸ்வெல்லை பெங்களூர் தட்டிச் சென்றது. மோரிஸை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக 16.5 கோடிக்கு அள்ளிச் சென்றது.
மோரிஸுக்குக் கொடுக்கப்பட்ட இந்த விலை ரொம்ப ஓவர் என்று பேச்சு எழுந்துள்ளது. எதற்காக இவ்வளவு அதிக தொகைக்கு இவரை எடுத்தது ராஜஸ்தான் என்ற ஆச்சரியமும் கிளம்பியுள்ளது.
மோரிஸை வைத்து இப்போது டிவிட்டரிலும் செமையாக கலாய்க்கின்றனர். நம்ம தினேஷ் கார்த்திக்கே களத்தில் குதித்து ஒரு கலாய் கலாய்த்து விட்டுப் போயுள்ளார். மோரிஸ் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் அவர் போட்ட டிவீட்டில், எங்கம்மா அப்பவே சொன்னாங்க.. நீ பாஸ்ட் பவுலரா மாறுன்னு.. நான்தான் கேட்காமல் எங்கப்பா சொன்னதைக் கேட்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆனேன். வீட்டில் எப்பவுமே அம்மாக்கள் தொலை நோக்கு பார்வையுடன்தான் செயல்படுவார்கள் என்பதை உணர்ந்த நாள் இன்று என்று கலகலப்பான டிவீட்டை போட்டுள்ளார்.

இதற்கு பலரும் பதிலைப் போட்டு கலகலப்பை கூட்டியுள்ளனர். அப்பக் கூட இந்திய பவுலராக இருக்கக் கூடாது வெளிநாட்டு பவுலராக இருக்க வேண்டும். உமேஷ் யாதவுக்கு 1 கோடிதான் ரேட் போயிருக்கு என்று ஒருவர் பதிலுக்கு கலாய்த்துள்ளார்.
இப்ப எல்லோரும் மோரிஸை விட்டு விட்டனர்.. அடுத்து அர்ஜூன் டெண்டுல்கருக்காக காத்துக் கிடக்கின்றனராம்.. எதுக்காகன்னா.. மீம்ஸ் போடத்தான்!