அகமதாபாத்: மும்பை அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் 34 பந்துகளில் 56 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து மும்பை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். மும்பை அணி சார்பாக ஆர்ச்சர், ஹிர்த்திக் ஷோக்கின் ஆகியோர் நீக்கப்பட்டு மெரிடித் மற்றும் குமார் கார்த்திகேயா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். குஜராத் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து குஜராத் அணி சார்பாக சாஹா - சுப்மன் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். அர்ஜுன் டெண்டுல்கர் பந்தில் சாஹா 4 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ஹர்திக் பாண்டியா - கில் இணை களமிறங்கியது. 5 ஓவர்கள் வரை சுப்மன் கில் நிதானம் காட்டிய நிலையில், 6வது ஓவரை வீசிய கேமரூன் க்ரீன் பந்துவீச்சில் ஒரு சிக்சர், இரு பவுண்டரி அடித்து பவர் பிளே ஓவர்கள் முடிவில் குஜராத் அணியின் ஸ்கோரை 50ஆக உயர்த்தினார்.
பின்னர் ஹர்திக் பாண்டியா 13 ரன்களில் ஆட்டமிழக்க, குஜராத் அணியின் ஸ்கோரை உயர்த்தும் பொறுப்பை சுப்மன் கில் எடுத்துக் கொண்டார். அவருக்கு உதவியாக விஜய் சங்கர் சிறப்பாக கம்பெனி கொடுக்க, சுப்மன் கில் ஒவ்வொரு ஓவரிலும் பவுண்டரியை விளாசினார். தொடர்ந்து சுப்மன் கில் 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தினார். நடப்பு ஐபிஎல் தொடரில் கில் அடிக்கும் மூன்றாவது அரைசதம் இதுவாகும்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சுப்மன் கில் 284 ரன்கள் விளாசி அசத்தியுள்ளார். குறிப்பாக அவரின் ஸ்ட்ரைக் ரேட் 142.71ஆக உள்ளது. மும்பை அணிக்கு எதிராக சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 10 ஓவருக்கு பின் அதிரடிக்கு கியரை மாற்றினார். ஆனால் கார்த்திகேயா பந்துவீச்சில் சிக்சர் அடிக்க முயன்று 34 பந்துகளில் 56 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். இதனால் குஜராத் அணி சிக்கலில் சிக்கியுள்ளது.