நவி மும்பை: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 மகளிர் உலகக் கோப்பை அரையிறுதியில், இந்திய அணி பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைத் தொடர்ந்து, கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களில் பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். குறிப்பாக, ஆட்ட நாயகி ஜெமிமா ரோட்ரிக்ஸின் அபாரமான சதத்தை அனைவரும் கொண்டாடித் தீர்த்து வருகின்றனர்.
கிரிக்கெட் உலகின் கடவுள் எனப் போற்றப்படும் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட முன்னாள், இந்நாள் வீரர்கள் பலரும் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணிக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். 339 என்ற இமாலய இலக்கை, 134 பந்துகளில் 127 ரன்கள் விளாசிய ஜெமிமாவின் பொறுப்பான ஆட்டத்தால், இந்தியா 48.3 ஓவர்களில் எட்டிப்பிடித்தது.

சச்சின் டெண்டுல்கர்: தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "அற்புதமான வெற்றி. முன்னின்று வழிநடத்திய ஜெமிமா மற்றும் ஹர்மன்ப்ரீத், சிறப்பாகச் செய்தீர்கள். பந்துவீச்சில் ஸ்ரீ சரணி மற்றும் தீப்தி சர்மா ஆட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருந்தீர்கள். மூவர்ணக் கொடியைத் தொடர்ந்து உயரப் பறக்க விடுங்கள்" என்று மனதாரப் பாராட்டியுள்ளார்.
ரோஹித் சர்மா: சமீபத்தில் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா, தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், "சிறப்பாகச் செய்தீர்கள், இந்திய அணி," என்று சுருக்கமாகவும், அழுத்தமாகவும் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார்.
ஷிகர் தவான்: தனது X தளத்தில், "இந்திய வீராங்கனைகளின் மிகச்சிறந்த செயல்பாடு! ஜெமிமா ரோட்ரிக்ஸின் ஆட்டம் முதிர்ச்சியின் உச்சம், ஹர்மன்ப்ரீத்தின் தலைமைத்துவம் அணியை அற்புதமாக வழிநடத்துகிறது. இறுதிப் போட்டியிலும் இதேபோல் சிறப்பாக முடித்து கோப்பையை வெல்லுங்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஆட்ட நாயகி விருது வென்ற ஜெமிமா ரோட்ரிக்ஸ் பேசியபோது, "இன்றைய தினம் எனது 50 அல்லது 100 ரன்களுக்கானது அல்ல; இந்தியாவை ஜெயிக்க வைப்பதற்கானது. எனக்கு சில வாய்ப்புகள் (கேட்ச் டிராப்) கிடைத்தது உண்மைதான். ஆனால், கடவுள் சரியான நேரத்தில் எல்லாவற்றையும் கொடுத்திருக்கிறார் என்று உணர்கிறேன். இதுவரை நடந்தது அனைத்தும் இந்த ஒரு தருணத்திற்காகவே அமைக்கப்பட்டது போல உள்ளது," என்று உணர்ச்சிப்பூர்வமாகப் பேசினார்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய மகளிர் அணி ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் மூன்றாவது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.