மும்பை: 2024ஆம் ஆண்டு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.
அண்மையில் மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவரது இடத்தில் ஹர்திக் பாண்டியா நியமனம் செய்யப்பட்டார். உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் அடைந்த தோல்வி ரோகித் சர்மாவின் கிரிக்கெட் வாழ்க்கையையே புரட்டி போட்டுள்ளது. ஏனென்றால் 36 வயதாகும் ரோகித் சர்மாவுக்கு ஐபிஎல் தொடரின் கேப்டன்சி தான் வளர்ச்சிக்கான அடித்தளமாக அமைந்தது.

ஐபிஎல் தொடரில் 5 முறை மும்பை அணிக்காக கோப்பையை வென்றதன் மூலமாகவே அவர் அடுத்த கேப்டனுக்கான ரேஸில் முன்னிலையில் இருந்தார். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் மும்பை அணிக்கு ரோகித் சர்மா சிறப்பாக செயல்படவில்லை. இதனை கவனித்து வந்த மும்பை அணி நிர்வாகம், ஹர்திக் பாண்டியாவை சரியான நேரம் பார்த்து மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது.
ஏற்கனவே டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா விலக்கப்பட்டுள்ள நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிக்கு மட்டுமே ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அதேபோல் வெளிநாடுகளில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் ரோகித் சர்மா இதுவரை பெரிதாக ரன்கள் சேர்த்ததில்லை. இதனால் டெஸ்ட் கேப்டன்சி மாற்றம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
அதுமட்டுமல்லாமல் 2025ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கு மெகா ஏலம் நடக்கும் பட்சத்தில் மும்பை அணி நிர்வாகம் ரோகித் சர்மாவை கழற்றிவிட வாய்ப்புகள் உள்ளது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், பும்ரா மற்றும் இஷான் கிஷன் ஆகிய 4 பேரையும் மட்டுமே மும்பை அணியால் தக்க வைக்க முடியும்.
இதனால் 37 வயதாகும் ரோகித் சர்மாவை ஓய்வு அறிவிக்க கோரி மும்பை அணி நிர்வாகம் வேண்டுகோள் வைக்கலாம். ஒருவேளை ஐபிஎல் தொடரில் ஓய்வை அறிவித்தால், இந்திய அணியில் இருந்து ரோகித் சர்மா புறந்தள்ளப்படுவார். 2025ஆம் ஆண்டு நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் ரோகித் சர்மா ஓய்வை அறிவிக்க முடிவு செய்திருந்தால், பிசிசிஐ மனது வைத்தால் மட்டுமே இந்திய அணியில் இருக்க முடியும் என்று பார்க்கப்படுகிறது.