ஜடேஜாவின் சமூக அக்கறை..கொரோனா விழிப்புணர்வுக்கான முயற்சி.. ரசிகர்கள் பாராட்டும் சிஎஸ்கேவின் வீடியோ!
குஜராத்: ஐபிஎல்-ல் இருந்து வீடு திரும்பிய சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உடனடியாக கொரோனாவுக்கு எதிரான போரில் தன்னை உட்படுத்திக்கொண்டுள்ளார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பல்வேறு இடங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் சிரமப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனால் கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் கொரோனா நிதியுதவி வழங்குவது மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதை செய்து வருகின்றனர். அந்தவகையில் தற்போது ஜடேஜாவும் அதில் இணைந்துள்ளார்.

வைரல் புகைப்படம்
ஐபிஎல் சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டராக இருந்து வரும் ரவீந்திர ஜடேஜா, சமீபத்தில் தனது சொந்த ஊரான குஜராத் மாநிலம் ஜாம்நகருக்கு சென்றடைந்தார். அங்கு தனது குதிரைகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த அவர், நான் மிகவும் பாதுகாப்பாக கருதும் இடத்திற்கே திரும்ப வந்துவிட்டேன் என குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவு நேற்று இணையத்தில் வைரலானது.

சிஎஸ்கே வீடியோ
இந்நிலையில் தற்போது சமூக அக்கறையுடன் செயல்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள வீடியோவில் அவர், இந்தியாவில் தற்போது நிலவும் கடினமான சூழலில் நாம் ஒன்றிணைந்து போராடி வெல்ல வேண்டும். அதற்காக பொதுமக்கள் அனைவரும் குடும்பத்தினருடன் தயவுக்கூர்ந்து வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள்.

ஜடேஜா வேண்டுகோள்
உங்களை சுற்றியுள்ளவர்கள் சிலர் உதவிக்கேட்க தயங்கி கஷ்டத்தில் இருக்கலாம். எனவே நீங்களே அவர்களிடம் ஏதாவது உதவி வேண்டுமா எனக்கேட்டு ஆதரவாக கொடுங்கள். அவர்களை எதுவாக இருந்தாலும் தைரியமாக முன்வந்து கேட்கும்படி கூறுங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து போராடினால் மட்டுமே கொரோனாவுக்கு எதிரான போரில் வெல்ல முடியும். முகக்கவசத்தை அணியுங்கள்!! என தெரிவித்துள்ளார்.

அஸ்வின் கோரிக்கை
இதே போல தமிழக வீரர் அஸ்வினும் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ட்விட்டரில் அவர், பொதுமக்கள் அனைவரும் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். துணியால் ஆன முகக்கவசத்தை அணியாமல், தரமானதை பயன்படுத்துங்கள். N95 முகக்கவசங்களை வாங்க சிரமப்படுபவர்களுக்கு இலவசமாக வாங்கி தர தயாராக உள்ளேன். கொரோனாவை எதிர்த்து போராட தடுப்பூசி மட்டுமே ஒரே தீர்வு எனத்தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications