
ஐபிஎல் தொடர்
ஐபிஎல் தொடர் முடிந்த அடுத்த 2 நாட்களில் டி20 உலகக்கோப்பை தொடர் வருவதால், அயல்நாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் நீடித்து வந்தது. பல்வேறு அயல்நாட்டு வீரர்களும் ஐபிஎல் தொடரின் 2வது பாதியில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டனர். இதனையடுத்து நீண்ட தேடுதல் வேட்டைக்கு பின்னர் மாற்று வீரர்களை ஒப்பந்தம் செய்து அணிகள் களமிறங்க தயாராக உள்ளது.

வீரர்கள் விலகல்
இந்நிலையில் இங்கிலாந்து அணியை சேர்ந்த நட்சத்திர வீரர்களான பேட்ஸ்மேன் ஜானி பேர்ஸ்டோ, டேவிட் மாலன் மற்றும் அல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ், ஆகிய மூவரும் ஐபிஎல் தொடரில் இருந்து திடீரென வெளியேறியுள்ளனர். அனைத்து வீரர்களின் ஒப்பந்தங்களையும் முடித்துவிட்டு நிம்மதி பெருமூச்சு விட்டிருந்த அணி நிர்வாகங்களுக்கு இந்த அறிவிப்பு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

வீரர்களின் கோபம்
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. இந்திய அணியில் கொரோனா வைரஸ் நுழைந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது. இதனால் இங்கிலாந்து வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதன் காரணமாகவே ஐபிஎல் தொடரில் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

பெரும் பின்னடைவு
ஐபிஎல் தொடரில் ஜானி பேர்ஸ்டோ சன் ரைசர்ஸ் ஐதாரபாத் அணியின் முக்கிய பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார். அதே போல கிறிஸ் வோக்ஸ் டெல்லி கேப்பிடல்ஸ் அணியிலும், டேவிட் மாலன் பஞ்சாப் கிங்ஸ் அணியிலும் முக்கிய வீரர்களாக இருந்து வருகின்றனர். இவர்களின் விலகல் அந்த அணிகளுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இது சரியில்லை
இந்நிலையில் வீரர்களின் இந்த முடிவால் அணி நிர்வாகங்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இதுகுறித்து பிசிசிஐ-க்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அணி நிர்வாகி பேசுகையில், இங்கிலாந்து வீரர்களிடம் கடந்த வியாக்கிழமையன்று போட்டியில் பங்கேற்க வருகிறீர்களா என்று கேட்டிருந்தோம். அவர்களும் சம்மதம் தெரிவித்திருந்தனர். அவர்களுடன் குடும்பத்தினரும் வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் சனிக்கிழமை அன்று திடீரென விலகுவதாக தெரிவித்தனர். இதனால் அனைவரும் அதிருப்தியில் இருக்கிறோம். இது சரியான முறை அல்ல. ஒப்பந்தங்களை மீறி இதுபோன்று செய்தல் கூடாது. இதுகுறித்து பிசிசிஐ-க்கு புகார் கடிதம் அனுப்பியுள்ளோம் எனக்கூறியுள்ளனர்.

புகார் கடிதம்
மேலும், வீரர்களின் சிரமங்களை நாங்கள் அறிவோம். தொடர்ந்து பயோ பபுள் சூழலில் இருந்து வருகின்றனர். இதனால் அவர்கள் விலக வேண்டும் என சிந்தித்தால், முன்கூட்டியே செய்திருக்க வேண்டும். கடைசி நேரத்தில் வெளியேறினால் மாற்று வீரரை தேடுவதில் எங்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது எனக்கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











