
கொரோனா அச்சுறுத்தல்
இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறி வீட்டிற்கு செல்ல வேண்டும் என கிளம்பி வருகின்றனர். இதில் ஆஸ்திரேலிய வீரர்கள்தான் அதிகம். ஏற்கனவே ஆடம் சாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் வெளியேறிய நிலையில் அடுத்ததாக வார்னர், ஸ்மித்தும் வெளியேறுவார்கள் எனக்கூறப்படுகிறது.

காரணம் என்ன?
கொரோனா அச்சம் காரணமாக சர்வதேச விமான போக்குவரத்துகள் நிறுத்தப்பட்டு வருகிறது. எனவே சொந்த நாட்டிற்கு திரும்ப நீண்ட நாட்கள் ஆகுமோ என்ற அச்சத்தில் இருவரும் வெளியேறவுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தனி விமானம் வேண்டும்
இந்நிலையில் மும்பை அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வீரர் கிறிஸ் லின் புதிய கோரிக்கையை வைத்துள்ளார். அதில் அவர், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஒவ்வொரு வீரர்களின் ஐபிஎல் ஊதியத்தில் 10% வாங்குகிறது. அந்த தொகையை ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு எங்களை சொந்த நாட்டிற்கு தனி விமானம் மூலம் அழைத்து வர உபயோகப்படுத்த வேண்டும்.

கடும் பாதுகாப்பு
வெளியில் மக்கள் கொரோனாவால் கடும் அவதிப்படுவதை அறிவேன். ஆனால் நாங்கள் கடும் பாதுகாப்புடன் பபுளுக்குள் உள்ளோம். அடுத்த வாரம் தடுப்பூசி கூட போட்டுக்கொள்ள இருக்கிறோம். எனவே, நாங்கள் தனி விமானத்தில் நாடு திரும்புவதற்கு அரசு அனுமதி அளிக்கும் என நம்புகிறோம். ஆபாத்துகளை அறிந்தே வீரர்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எனினும், ஐபிஎல் முடிந்த பிறகு பத்திரமாக தாயகம் திரும்பினால் சிறப்பாக இருக்கும் எனத்தெரிவித்துள்ளார்


Click it and Unblock the Notifications











