சிறப்பான தொடக்கம்
இதில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய மும்பை அணியில் ஓப்பனிங் வீரர்கள் ரோஹித் ஷர்மா 33 ரன்களும் குயிண்டன் டி காக் 55 ரன்களும் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். நல்ல பார்ட்னர்ஷிப் கிடைத்ததால் அணியின் ஸ்கோர் 180க்கு மேல் செல்லும் என எதிர்பார்க்கப்பட்டது.
சரிந்த ஸ்கோர்
ஆனால் மும்பை அணியின் மிடில் ஆர்டர் மோசமாக சொதப்பியது. முதல் விக்கெட்டிற்கு களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் 5 ரன்கள், இஷான் கிஷன் 14, கெய்ரன் பொல்லார்ட் 21 ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 156 ரன்களை மட்டுமே எடுத்தது.
2வது இன்னிங்ஸ்
இதன் பின்னர் களமிறங்கிய கொல்கத்தா அணியில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அட்டகாசம் செய்தனர். குறிப்பாக வெங்கடேஷ் ஐயர் 53 ரன்கள், ராகுல் திரிபாதி 74 ரன்கள் ஆகியோரின் அதிரடியால் அந்த அணி 15.1 ஓவர்களில் 3 விக்கெட்களை மட்டுமே இழந்து 159 ரன்கள் அடித்து, 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.
2 தோல்விகள்
சிஎஸ்கே, கொல்கத்தா என தொடர்ந்து 2 மோசமான தோல்விகளை சந்தித்துள்ள மும்பை அணி, செய்து வரும் தவறு என்ன என்பது குறித்து கேப்டன் ரோகித் பேசியிருந்தார். அதில் அவர், நாங்கள் சிறப்பாக தொடக்கத்தை தான் கொடுத்தோம். ஆனால் ஆட்டத்தின் இறுதியில் மோசமாக சொதப்பிவிட்டோம். அபுதாபி பிட்ச், ரன் அடிக்க ஏதுவான ஒன்றாக தான் நான் கணித்திருந்தேன் அதன்படியே தொடக்கமே அதிரடி கொடுத்தோம்.
மிடில் ஆர்டர் சொதப்பல்
ஆனால் மிடில் ஆர்டரில் வந்த வீரர்கள் ரன்களை தொடர்ந்து எடுத்துச் செல்ல தவறவிட்டுவிட்டனர். அடுத்தடுத்து விக்கெட் விழும்போது, சிறிய பார்ட்னர்ஷிப்பாவது அமைத்திருக்க வேண்டும். அதேபோல், பந்துவீச்சிலும் முதல் சில ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கியது தோல்விக்குக் காரணமாக அமைந்துவிட்டது எனக் கூறினார்.
Recommended Video
மீண்டும் அதே தவறுதான்
கடந்த போட்டியில் நாங்கள் என்ன தவறு செய்தோமோ, அதே தவறைத்தான் இந்த போட்டியிலும் செய்திருக்கிறோம். இருப்பினும், இது அனைத்திலும் இருந்தும் எங்களால் மீண்டு வர முடியும். கடுமையாகப் போராடி வெற்றிகளைக் குவிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது என ரோகித் தெரிவித்துள்ளார்.
மறைமுக அடி
மிடில் ஆர்டரில் பொறுப்புடன் விளையாடி இருக்க வேண்டிய பொல்லார்ட் சொதப்பிவிட்டார். இதே போல பவுலிங்கில் பும்ரா தான் முதல் சில ஓவர்களில் ரன்களை வாரி வழங்கினர். எனவே இந்த இரண்டு சீனியர் வீரர்களை தான் ரோகித் சர்மா மறைமுகமாக சாடியுள்ளார் என்பது தெரிகிறது