
ப்ளே ஆஃப் சுற்று
ப்ளே ஆஃப் செல்லும் 4வது அணி எது என்பதில் தான் இன்னும் கடும் போட்டி நிலவி வருகிறது. ஒரு இடத்திற்காக பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா, மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் என 4 அணிகள் போட்டிப்போட்டு வருகின்றன. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணி கிட்டத்தட்ட வெளியேறுவது உறுதியாகியுள்ளது. ஆனால் ப்ளே ஆஃப் கணக்குகள் மூலம் உள்ளே நுழைய வாய்ப்புள்ளது.

இன்று முக்கிய போட்டி
இந்நிலையில் ப்ளே ஆஃப் ரேஸை முடிவுக்கு கொண்டு வரும் முக்கிய போட்டி இன்று நடைபெறவுள்ளது. இன்று இரண்டு போட்டிகள் நடைபெறவிருக்கிறது. முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் மோதுகின்றன. 10 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி இந்த போட்டியில் தோல்வியடைந்துவிட்டால் ப்ளே ஆஃப் ரேஸில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறிவிடும். ஒரு வேளை வெற்றி பெற்றாலும், மும்பை மற்றும் கேகேஆர் அணிகளின் போட்டிகளை பொறுத்து உள்ளே நுழைய மிகச்குறைந்த வாய்ப்பு இருக்கிறது.

கொல்கத்தா - ராஜஸ்தான்
இன்று இரவு நடைபெறும் மற்றொரு போட்டி தான் மிக முக்கியமானது. இந்த போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 12 புள்ளிகள் மற்றும் அதிக ரன்ரேட்டுடன் இருக்கும் கொல்கத்தா அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றுவிட்டால் ப்ளே ஆஃப் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகிவிடும். ஒருவேளை தோல்வியடைந்துவிட்டால் ராஜஸ்தான் அணியும் ப்ளே ஆஃப் ரேஸில் தொடர்ந்து நீடிக்கும். இதனால் மும்பை அணியின் கடைசி போட்டிகாக கேகேஆர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் காத்திருக்க வேண்டியிருக்கும்.

கடைசி போட்டி
மும்பை இந்தியன்ஸ் அணி நாளை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. கொல்கத்தா இன்று வெற்றி பெற்று, அதே போல மும்பை அணி நாளை வெற்றி பெற்றால் ரன் ரேட் அடிப்படையில் அதிகமாக இருக்கும் அணி ப்ளே ஆஃப் செல்லும். இரு அணிகளும் தோல்வியடைந்தாலும் ரன் ரேட்டே முக்கியமானதாக இருக்கும். ஒருவேளை கொல்கத்தா இன்று தோல்வியடைந்து மும்பை நாளை வெற்றி பெற்றால் புள்ளிகள் அடிப்படையில் மும்பை இந்தியன்ஸ் அணி ப்ளே ஆஃப்-க்கு தகுதிப்பெறும். எனவே இன்றைய போட்டி மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











