அகமதாபாத்: குஜராத் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில் கொடுத்த கேட்சை டிம் டேவிட் தவறவிட்ட நிலையில், அவர் 32 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார்.
குஜராத் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2வது போட்டியில் மும்பை அணி விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் திடீரென மழை பெய்ததால், ஆட்டம் 8 மணிக்கு தாமதமாக தொடங்கப்பட்டது. இதையடுத்து டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். மும்பை அணியில் குமார் கார்த்திகேயா சேர்க்கப்பட்டார். அதேபோல் குஜராத் அணி தரப்பில் சாய் சுதர்சன், ஜோஷ் லிட்டில் சேர்க்கப்பட்டனர்.

பின்னர் குஜராத் அணி சார்பாக சுப்மன் கில் - சாஹா இணை தொடக்கம் கொடுத்தது. மும்பை அணி தரப்பில் முதல் ஓவரை பெஹ்ரண்டார்ஃப் வீசினார். இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், 4 ஓவர்கள் முடிவில் 27 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது. இதையடுத்து பவர் பிளேவின் அடுத்த 2 ஓவர்களில் அதிரடியாக ஆட வேண்டிய நிலைக்கு குஜராத் அணி வீரர்கள் தள்ளப்பட்டனர். இதையடுத்து 5வது ஓவரை வீசிய பெஹ்ரண்டார்ஃப் பந்துவீச்சில் இரு பவுண்டரிகள் உட்பட 11 ரன்கள் சேர்க்கப்பட்டது.
இதனால் மும்பை அணி தரப்பில் முதல் விக்கெட்டை வீழ்த்த ஜோர்டன் கைகளில் பந்து கொடுக்கப்பட்டது. அந்த ஓவரின் 2வது பந்தில் சிக்சரையும், 3வது பந்தில் பவுண்டரியையும் சுப்மன் கில் விளாசினார். இருப்பினும் 5வது பாந்தில் கில் அடித்த பந்து நேராக டிம் டெவிட் கைகளுக்கு சென்றது. அதனை தாவி பிடிக்க முயன்ற டிம் டேவிட், கேட்சை தவறவிட்டார். 30 ரன்களில் சுப்மன் கில் இருந்தபோது, டிம் டேவிட் கேட்சை தவறவிட்டார்.
இதனை பயன்படுத்தி கொண்ட சுப்மன் கில், அடுத்தடுத்து அதிரடிக்கு மாறினார். இதன் காரணமாக 32 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். நடப்பு ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் 2 சதங்களையும் விளாசி அசத்தியுள்ளார். இதன் காரணமாக ஆரஞ்ச் கேப் பட்டியலில் டூ பிளஸிஸை சுப்மன் கில் பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.